பக்தவத்சலேஸ்வரர் கோவில் - திருக்கழுக்குன்றம்

இப்பிராகாரத்தில் ; ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது),
இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான
வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய
சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்
பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக்
கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன்
மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உள்ளே வலம்
வரலாம். நின்ற திருக்கோலம்.

அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.
ஆண்டில் (1) ஆடிப்பூரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும்
நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு
அபிஷேகம் செய்யப்பெறுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே
நடைபெறுகின்றது. அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி
அந்தாதிப்     பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப்
பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகிரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும்
அழகாகவுள்ளது. வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு
நின்று வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார
பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது
சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய
அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும்,
அதனையடுத்து அறுபத்து மூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.
பைரவர் வாகனமின்றி உள்ளார்.

மூலவர் தரிசனம் - சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.)
சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம். கருவறை
‘கஜப்பிரஷ்ட’ அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக ; விநாயகர்,
தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உளர்.
சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. நித்திய
வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை
முதலியன     மலைமீது     நிகழும்.     திருவிழாக்கள் ; அனைத்தும்
தாழக்கோயிலில்தான்     சித்திரைப்     பெருவிழாவில் ; மூன்றாம் நாள்
உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும் ; சுவாமி
அதிகாரநந்தியிலும், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி
மலைவலம் வருவது இன்றும் நடைபெறுகின்றது. ஆடிப்பூரப்
பெருவிழாவில் பத்தாம் நாள் அன்று அம்பாள் எழுந்தருளி மலைவலம்
வருவது வழக்கம். அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில்
நால்வர் கோயில் உள்ளது. இப்பகுதி ‘நால்வர்கோயில்பேட்டை’ என்று
வழங்குகிறது.

கல்வெட்டில் இத்தலம் ‘உலகளந்த சோழபுரம்’ என்று குறிப்பிடப்
படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க்
கோட்டத்தைச் சார்ந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்,
சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள்
கிடைத்துள்ளன.

“தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே”
                 (சம்பந்தர்)

“மூவிலை வேற்கையானை மூர்த்திதன்னை
    முதுபிணக்காடுடையானை முதலானானை
ஆவினில்ஐந்து உகந்தானை அமரர்கோனை
    ஆலாலம் உண்டுகந்த அம்மான்தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன்தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான்தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்நானே.”
                 (அப்பர்)

‘நீளநின்று தொழுமின் நித்தலு(ம்) நீதியால்
ஆளுநம் வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே.’
                 (சுந்தரர்)

‘பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன்நாமங்கள் பேசுவார்க்கு
இணங்கிலாததோர் இன்பமே வரும்துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.’
                (மாணிக்கவாசகர்)

வேதவெற்பிலே புனத்தில் மேவிநிற்கு - மபிராம
    வேடுவச்சி பாதபத்ம மீதுசெச்சை - முடிதோய
ஆதரித்து வேளைபுக்க ஆறிரட்டி - புயநேய
    ஆதரத் தொடாத ரிக்க ஆனபுத்தி - புகல்வாயே
காதுமுக்ர வீரபத்ர காளி வெட்க - மகுடாமா
    காசமுட்ட வீசிவிட்ட காலர்பத்தி - யிமையோரை
ஓதுவித்த நாதர் கற்க வோதுவித்த - முனிநாண
    ஓரெழுத்தி லாறெழுத்தை யோதுவித்த - பெருமாளே.
                 (திருப்புகழ்)
                 -‘நன்னெறியோர்

துன்னு நெறிக்கோர் துணையாந் தூய கழுக்குன்றினிடை
முன்னு மறிவானந்த மூர்த்தமே.’
                    (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. வேதகீரீஸ்வரர் திருக்கோயில்
திருக்கழுக்குன்றம் & அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம். 603 109.


முன்