சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம்
நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும்
இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்தி
தலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு
பிரம்மா மற்றும் ஸரஸ்வதிசிலைகள் சிவபெருமானின் தலத்தில்
வைக்கப்பட்டுள்ளன.
கண்டன ஷேத்ரமென்றும், பஞ்சகமல ஷேத்ரமென்றும்
அழைக்கப்படும் இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. அதாவது
கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன்,
கமலவல்லி நாச்சியார் என ஐந்து.
இத்தலம் ஸ்ரீரங்கத்தைவிட மிகவும் தொன்மைவாய்ந்தது.
இத்தலத்தின் முதல் பெருமாள் ஸ்ரீசந்தானகோபால கிருஷ்ணனும்,
நவநீத கிருஷ்ணனும் ஆவார்கள். பல சதுர்யுகங்களுக்கு
முன்னால் உண்டானது இந்த திவ்ய ஷேத்ரம்.
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண
தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள
திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது
அளவு கடந்த பக்தி பூண்டவர்.
நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத
வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள்
அழகிலும், அருளிலும் பொலிவுற்று திகழ்பவை.
பேசவரின் தென்னரங்கன் பேரெல்லாம் பேசுகவாய், கேசவனைக்
காண்க விழி, கேட்க செவி - ஈசனார் உண்டியூர் தோறுமுழன்
றிரவாமல் தவிர்த்தான். கண்டியூர் கூப்புக என்கை - என்று
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி புகலும்.
-
திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில்
இத்தலத்துப் பெருமைபற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து
ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும்
கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன் மல்லை என்னும் நான்கு
ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
சேக்கிழாரின் பெரியபுராணமும், கந்தபுராணமும் பிரம்மனின்
மண்டையோடு சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதைப்
பற்றிப் பேசுகின்றன.
மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின்
முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக
அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார்
எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை
வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண
பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.