சௌரிராசப்பெருமாள் கோவில் - திருக்கண்ணபுரம்
வரலாறு

பாத்ம புராணத்தின் ஐந்தாவது காண்டத்தில் 96 முதல் 111 வரை
உள்ள அத்தியாயங்களில் இத்தலம் விதந்து விதந்து பேசப்படுகிறது.
விரைந்து மோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமி சாரண்ய
முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர்
இத்தலத்துப் பெருமையைப் பரக்கப் பேசுகிறார்.

வஸு என்னும் ஒரு மஹராஜன் வானத்தில் பறக்கும் சக்தி
பெற்றிருந்ததால், அவன் உபரிசரவசு என்றழைக்கப்பட்டான். ஒரு
காலத்தில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த யுத்தத்தில்
தோற்றுப்போன தேவர்கள் உபரிசரவசுவின் உதவியை நாட இம்மன்னின்
உதவியால் தேவர்கள் வெற்றிபெற்றனர்.

போர்     முடிந்து திரும்பிய வசு தாகவிடாய்     தீர்க்க
கிருஷ்ணாரண்யத்தில் இறங்க அங்கு (“ஒரு விரலில் தம் உலர்ந்த
சரீரத்தை உலர்த்துமாப் போல்”) மெலிந்த தேகத்தினரான முனிவர்கள்
தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று
எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் கொய்ய, முனிவர்களின்
அபயக் குரல் கேட்ட எம்பெருமான் 16வயது பாலகனாய் வந்து
படையைத் துவம்சம் செய்ய அசுரர்களை வென்ற நமக்கு இச்சிறுவன்
ஒரு பொருட்டோ என்றெண்ணிய உபரிசரவசு பல அஸ்திரங்களையும்
ஏவி அதிர்ந்து போக இறுதியில் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து
நாராயணஸ்திரத்தை ஏவ அது சுழன்று சுழன்று அப்பாலகனின்
காலடியில் சரணடைய தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே
என்றறிந்த வஸு மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு
வேண்டினான்.

என் பக்தர்களான மஹரிஷிகள்     உலர்ந்த மாமிசத்தை
உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவிப்பதால்
இதற்கு உத்பலவதாக விமானம் என்றும் இங்கு ஸாநித்யம் கொண்ட
எனக்கு சௌரி என்றும் திருப்பெயர். உமது தவறை மன்னித்தோம். நீ
வேண்டிய வரம்கேள் என்று பெருமாள் அருள, தன் மகளை திருமணம்
புரிய வேண்டும் என்று மன்னன் கேட்க, மாயவனும் அதற்கிசைந்து
அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

முன் பின்