மாமரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தாவரவியல் பெயர் : மாஞ்சிஃபெரா இண்டிகா(Mangifera indica L.)
குடும்பம் : அனகார்டியேசி (Anacerdiaceae)

இது கனிகளுக்காகவே பயிரிடப்படும் மரமாகும். மாம்பழத்தைக் கனிகளின் அரசன் என்பர்.
மாமரம்

பெரிய பசுமை மாறா மரமான மா 10-45 மீ உயரம் வரை வளரக்கூடியது. இதன் கிளைகள் பரவலாக அடர்த்தியான தழைகளைக் கொண்டவை. மரப்பட்டை கெட்டியாக, சொரசொரப்பாக இருக்கும். மரம் முதிரும் போது பட்டை தனியே வந்துவிடும்.

இம்மரம் இந்தியாவில் 4000 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இமயமலைச் சாரல், மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மைய இந்தியா, பீகார், ஒரிசா, அஸ்ஸாம், அந்தமான் தீவுக் காடுகளில் குறிப்பாக நதி, ஓடைக் கரைகள் ஆகிய இடங்களில் இது மிகுதியாகக் காணப்படுகிறது. இம்மரம் ஏறத்தாழ 100 ஆண்டு வரை பயனளிக்கும்.

பயன்கள் :

இது வெப்ப மண்டல நாடுகளில் கிடைக்கும் பழங்களில் மிகச் சிறந்தது. மாம்பிஞ்சு, மாங்காய், ஊறுகாய் போட மிகச்சிறந்தது. இதற்குக் காரணம் அதிலுள்ள சிட்ரிக், மாலிக், ஆக்சாலிக், சக்சிலிக் அமிலங்களேயாகும். மாந்தளிரை ஜாவா, ஃபிலிப்பைன்ஸ் தீவு மக்கள் கீரை போல் மசித்துண்பர். இதில் அமிலத்தன்மை மிகுதியாக உண்டு. மாம்பூவிலிருந்து அத்தர் எனப்படும் மணப்பொருளைத் தயார் செய்வதுண்டு. உலர்ந்த மாம்பூ மருந்தாகப் பயன்படுகிறது.

மாம்பட்டையில் டானின் உள்ளமையால் இதைப் பதனிடப் பயன்படுத்துவர். மேலும் பட்டையிலிருந்து இளம் மஞ்சள் சாயப்பொருள் கிடைக்கிறது. மாம்பட்டையுடன் மஞ்சள், சுண்ணாம்பு சேர்த்துப் பருத்தித் துணிக்கு அழகிய இளஞ்சிவப்பு நிறம் தரப்படுகிறது. பட்டையிலிருந்து எடுக்கப்படும் மேன்ஜிஃபெரின் என்பது மருந்துப் பொருளாகும். மரத்திலிருந்து வெளிவரும் கோந்து பித்தவெடிப்பு மற்றும் தோல் நோய்களுக்குப் பயன்படும்.

மாமரம் பழுப்பு அல்லது பசுமை கலந்த பழுப்பு நிறம் கொண்டது. கெட்டியான சொரசொரப்பான இது கதவு, ஜன்னல், தளம், பெட்டி, தீப்பெட்டி செய்ய ஏற்ற மரம்.