தொப்பிக்கல்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

தொப்பிக்கல் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னமாகும். இது பழந்தமிழகத்தின் ஒரு பகுதியான கேரளாவில் காணப்படுகின்றது.

சிறப்பு

பழந்தமிழர்கள் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இறந்தவர்களுடைய உடலின் சில எலும்புகளைத் தாழிகளுக்குள்ளோ, குழிகளிலோ புதைத்து, அதன் மீது நினைவுச் சின்னங்களை எழுப்பினர். அந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றுதான் தொப்பிக்கல். இந்த நினைவுச் சின்னங்கள் இங்கு இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை உணர்த்தும் வகையில் அமைகின்றன.

வடிவம்

இது பார்ப்பதற்குத் தொப்பி தரையில் கவிழ்த்து வைக்கப்பட்டது போல இருக்கும்.

இது பெரிதும் லேட்டரைட் எனப்படும் செம்புராங் கல்லில் செய்யப்பட்டது.

காணப்படும் இடம்

இது கேரளாவின் வடக்குப்பகுதி மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் காணப்படுகின்றது. சேரமான்காடு என்ற இடத்தில் (திருச்சூருக்கு அருகில்) பல தொப்பிக்கற் சின்னங்கள் உள்ளன.

காலம்

இவை பொ.ஆ.மு.1000லிருந்து பொ.ஆ. 500 வரையான காலக்கட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

மேற்கோள் நூல்

Leshnik,L.s 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. wiesbaden.