தனிமகனார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

தனிமகனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவராவார். இவர் பாடிய பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் 153 ஆம் பாடலாக உள்ளது. பாலைத்திணையுள் அமைந்த இப்பாடல் தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை வெளிப்பாடாய் அமைந்துள்ளது.

இவர் தம் பெயர்க்காரணம் தெரியவில்லை. இத்தகைய நேரங்களில் சங்கப் பாடல்களைத் தொகுத்த சான்றோர்கள் அவர் தம் பாடலுள் அமைந்துள்ள அழகிய உவமை நயத்தை வைத்துப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறு அமைந்ததே அணிலாடு முன்றிலார், ஓரேருழவனார் என்பனவாகும்.

தனிமகனார் பாடிய பாடலில் பிரிவிடை மெலிந்த தலைவி

“வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் உளர்ப்
பாழ் காத்திருந்த தனிமகன் போன்றே”
என்று பாடும் உவமை நயம் இவர் தம் காரணப் பெயருக்குக் காரணமாயிற்று.