வீ.ப.கா.சுந்தரனாரின் வாழ்க்கை முனைவர் இரா.மாதவி உதவிப் பேராசிரியர் இசைத்துறை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இராஜபாளையம் அருகிலுள்ள கோம்பை என்னும் கிராமத்தில் மறவர் குடியில் தோன்றியவர். இவர் 1915 செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். இவர் 15 வது வயதிலிருந்தே குறட்பா எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் வெண்பாக்கள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதில் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவர் இளமையிலேயே தமிழில் ஆர்வம் கொண்டவர். சுந்தரம் என்ற தம் பெயருக்கு முன்னால் தம் தந்தை வழிப்பாட்டனார், தாய் ஆகியோர்களின் பெயர்களை வைத்துக்கொண்டார். வீ - தந்தை வழிப்பாட்டனார் - வீரணன்
ப - தந்தை - பரமசிவம் கா - தாய் - காமாட்சி இவர் மறவர் குடியில் பிறந்தாலும் தமது தந்தையாரின்
விருப்பத்துக்கிணங்கி கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறினார். அவ்வினத்தில் பிறந்த
‘கிரேஸி’ என்னும் இல்ல நல்லாளை மணம் முடித்துக்கொண்டார். இவருக்கு நான்கு
மக்கள். அனைவருமே ஆடவர்கள். வீ.ப.கா.சுந்தனாரின் இசைக்கல்வியும், வழங்கப்பட்ட பட்டங்களும் : இவர் சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவர் மேன்மை மிகு “சங்கர சிவம்” அய்யா அவர்களிடம் சுமார் பத்தாண்டுகளாக இசையின் காலக் கணக்குகள் பற்றியும் முழவு முழக்கியங்கள் பற்றியும் பாடம் கேட்டார். அவற்றின் பயனாகவே சுந்தரனார். “மத்தள முழக்கியல்” (The Art of Drumming) என்ற பெரும் நூலுக்கு உரை எழுதியுள்ளார். மேலும் இவரிடமே தாள சொற்கட்டுக்களையும், மிருதங்கம் கஞ்சிரா போன்ற கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மத்தளத்தையும், கஞ்சிராவையும் மாமேதையான மதுரை கிருஷ்ண அய்யங்காரிடம் பயிற்சி பெற்றவர். வீ.ப.கா.சுந்தரனாரின் இசைப்புலமை : மிருதங்கம் (முழவு), கஞ்சிரா (கைப்பறை), ஒத்து, புல்லாங்குழல் ஒத்திசைப்பெட்டி (ஆர்மோனியம்) போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும், திறமை பெற்றிருந்தார். இவர் புல்லாங்குழல் வாசிப்பதால் மிக்க பயிற்சியுடையவராகத் திகழ்ந்தார். வீ.ப.கா.சுந்தனாரின் சான்றோர்களின் நட்பு : வீ.ப.கா.சுந்தரனார் கடிதத்தின் மூலம் “மொழி ஞாயிறு” என்ற பெயரைத் தேவநேய பாவாணாருக்கு சூட்டியவரும் இவரே ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் –
இராசாசர் முத்தையா செட்டியார்
அருட்செல்வர் பொள்ளாச்சி – நா.மகாலிங்கம் சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் இயக்குனர் – இரா.முத்துக்குமரன் இந்து சமய முன்னாள் தமிழக அமைச்சர் – ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களின் மீது மிகுந்த நட்பு கொண்டவர். “சிறுவர் இன்பம்” என்னும் நூலுக்கு அளித்த முகவுரையில் இவரை “தம் நண்பர்” என்றும் “அறிஞர்” என்றும் பாவேந்தர் பாரதிதாசன் போற்றியுள்ளார். இவர் 16 தமிழிசை நூல்களை இயற்றியுள்ளார்.
|