1.0 பாட முன்னுரை |
பெரியபுராணம் என்பது சைவ சமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் நூல். இதற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சைவ சமய இலக்கியங்களைப் பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுத்துள்ளனர். இப்பகுப்பைப் பன்னிரு திருமுறை என்று அழைப்பர். இப்பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சைவ சமய உலகிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெரியபுராணம் பெற்று விளங்குகின்றது. சிலப்பதிகாரத்தை அடுத்துப் பெரியபுராணத்தை மட்டுமே தமிழ்க்காப்பியமாக அறிஞர்கள் போற்றி உள்ளனர். தமிழ்நாட்டில் வாழ்ந்த சைவ அடியார்கள், அடியார்கள் வாழ்வில் நிகழ்ந்த சமய நிகழ்ச்சிகள், இறைவன் அடியார்க்கு அருள் செய்த இறைச் செயல்கள் ஆகிய இவற்றைத் தமிழ்ப் பண்பாடு சிறந்து விளங்கப் புலவர் இயற்றி உள்ளார். பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அடியார்கள். இவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த புலவர் காப்பியமாகப் பாடி உள்ளார். அடியார்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து காப்பியம் உருவான காலம் வரை ஏறத்தாழ ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகள் இடைவெளி உண்டு. இக்கால இடைவெளியில் வாழ்ந்த அடியார்களின் வரலாற்றை இரண்டு புலவர் பெருமக்கள் பாடி உள்ளனர். அவை: 1) சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை 2) நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி
என்பவையாகும்.
இந்த இரண்டு நூல்களும் பெரியபுராணத்திற்கு
அடிப்படை நூல்கள்
ஆகும். பெரியபுராணக் காப்பியம் பற்றிய அறிமுகமாக இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. |