6.4 கவிநயம்

பெருங்கதையைப் பல்வேறு உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். இதிலிருந்தே இக்காப்பியத்தின் பெருமையை உணர முடியும். சங்க இலக்கிய அக மரபுகளையும் புற மரபுகளையும் (காதல், வீரம்) தழுவி இக்காப்பியம் படைக்கப்பெற்றுள்ளது. செறிந்த சொல்லாட்சி, சங்கப் பாடல்களை நினைவூட்டுகின்றன. கற்பனை, உவமை, வருணனை ஆகியன சங்கப் பாடல்களை மட்டும் இன்றிச் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் நினைவூட்டுகின்றது. உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள்களையும் இக்காப்பியம் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இத்தகைய சிறப்புமிக்க பெருங்கதையின் கவிதை நயத்தை இனி அறிந்து கொள்வோம்.
 

6.4.1 வாழ்வியல் தத்துவங்கள்

எத்தகைய காப்பியமாயினும் அது, மனித வாழ்க்கையை மேம்படுத்துமாறு அமைக்கப்படுதல் வேண்டும். பெருங்கதை மனித வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களை ஆங்காங்கே கூறிச் செல்கின்றது. இத்தகைய குறிக்கோள்களை உ.வே. சாமிநாதையர் பெருங்கதைப் பதிப்புரையில் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

  • தெய்வ வழிபாடு சிறந்தது.

  •  பெரியோரை வணங்குதல் நல்லது.

  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

  • கல்வி கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.

  • எந்தக் காலத்திலும் கல்வியைக் கைவிடக் கூடாது.

  • நல்ல துணைவர்களைப் பெற்றவன் கவலை இன்றி வாழ்வான்.

  • ஒரு காரியத்தைச் செய்ய நினைப்பவன் அதற்குரிய துணையையும் கருவியையும் முதலில் பெற வேண்டும்.

  • நன்றி பாராட்ட வேண்டும்.

  • காலத்தைக் கண்ணாக மதிக்க வேண்டும்.

  • யாரிடத்தும் பகை கொள்ளக் கூடாது; யாரையும் இகழக் கூடாது.

  • தருமத்தை உயிராக எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறான பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் காப்பியத்தில் விளக்கப்பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.
 

6.4.2 தமிழர் வாழ்வும் பண்பாடும்

பெருங்கதை வடமொழியிலிருந்து தழுவி எழுதப்பெற்ற நூலாக இருப்பினும், தமிழர் வாழ்வையும் பண்பாட்டையும் விளக்கமாகச் சொல்கிறது. நூல் எழுந்த காலத்தின் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை, பழக்க வழக்கத்தை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் காப்பியம் படைக்கப்பட்டுள்ளது. சில பண்பாட்டுக் கூறுகள் வருமாறு:

அரண்மனை அமைப்பு - ஆட்சி முறை - அரசன் பண்பு - படை -ஆயுதங்கள் - எந்திரப் பொறிகள் - ஊர்திகள் - கோட்டைகள் - கைத்தொழில் - கோயில் - சாதி - சிற்பம் - இசை - கட்டடம் - நாணயங்கள் - பறவைகள் - விலங்கினங்கள் - மகளிர்க்குரிய விளையாட்டுகள் - கலைகள் - திருமணம் - சடங்கு முறைகள் - விழாக்கள்  முதலிய பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் இக்காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
 

எந்திரப் பொறிகள்

எந்திரப் பொறிகள் பற்றிய விவரங்களை மட்டும் இங்கே நாம் காண்போம். பெருங்கதையில் பல்வேறு எந்திரப் பொறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு:

1) காளைகள் இன்றி விரைந்து செல்லும் வண்டி.
  (காளை - மாடு)

2) போருக்குப் பயன்படும் யானைப் பொறி.

இந்த யானைப் பொறி ஆயுதங்களையும் போர் வீரர்களையும் தன்னுள்   ஏற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் வெளியே தெரியாதவாறு மறைத்துக் கொள்ளும். உயிருள்ள யானை போல நடந்து செல்லும்.

3) ஆகாய வழியே செல்லும் விமானம்.

ஏற விரும்பியவர்களை ஏற்றிக் கொள்ளும். அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கும்படி ஆகாய வழியே விரைந்து செல்லும்.

4) காலத்தைக் காட்டும் எந்திரம்.

நாழிகையை (மணியை) அளவிடும் கருவி. விண்மீன்கள் தோன்றுவதையும் மறைவதையும் புலப்படுத்தும் பொறி மண்டலம்.
 

6.4.3 வருணனை

இலக்கிய நயத்தில் சுவை கூட்டுவது வருணனைப் பகுதி ஆகும். காப்பியங்களில் வருணனை ஓர் இலக்கணமாகவே ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்க் காப்பியங்களில் ஐவகை நில (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வருணனைகள் இடம் பெறுவது உண்டு. புலவனின் கற்பனையை இந்த வருணனைகளில் கண்டு மகிழ முடியும். கொங்கு வேளிர் நிலங்களை வருணிப்பதில் சிறந்து விளங்கி உள்ளார். ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்ப்போம்.
 

முல்லை நில வருணனை

முல்லை நிலத்தில் வாழுகின்ற ஆடவர்கள் பொருள் தேடித் தம் மனைவியரைப் பிரிந்து செல்கின்றனர். மனைவியர் கணவர் பிரிந்ததனால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தைத் தாங்கி ஆற்றி வாழ்கின்றனர். இது தமிழர்கள் முல்லைத் திணைப் பாடல்களுக்காக வகுத்த இலக்கிய மரபு ஆகும். கொங்குவேளிர் முல்லைத் திணையை வருணிக்கும் அழகைப் படித்து மகிழுங்கள்.

பாடல் இதோ:

பொருள்வயிற் பிரிவோர் வரவுஎதிர் ஏற்கும்
கற்புடை மாதரின் கதுமென உரறி
முற்றுநீர் வையகம் முழுதும் உவப்பக்
கருவி மாமழை பருவமொடு எதிரப்
பரவைப் பௌவம் பருகுபு நிமிர்ந்து
கொண்மூ விதானம் தண்ணிதின் கோலித்
திருவில் தாமம் உருவுபட நாற்றி
விடுசுடர் மின்னொளி விளக்கம் மாட்டி
ஆலி வெண்மணல் அணிபெறத் தூஉய்க்
கோல வனப்பின் கோடணை போக்கி
அதிர்குரல் முரசின் அதிர்தல் ஆனாது
தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து
வேனில் தாங்கி மேனி வாடிய
மண்ணக மடந்தையை மண்ணு நீராட்டி
முல்லைக் கிழத்தி முன்னருள் எதிர

(பெரு. உஞ்சைக் காண்டம், 49 : அடிகள் 76 - 90)

(வரவுஎதிர் ஏற்கும் = பிரிந்தோர் வரவை எதிர்பார்க்கும்; கதும் = திடும் என்று / விரைந்து; உரறி = முழங்கி; முற்று = முழுமை; வையகம் = உலகம்; கருவி = தொகுதி / இடி மின்னல் முதலியவற்றின் தொகுதி; பருவம் = கார்ப்பருவம்; பரவை = கடல் / பரவி நிற்கும் நீர்; பௌவம் = கல்; பருகுபு = பருகி; கொண்மூ = மேகம்; விதானம் = மேற்புறம் கட்டி / மேற்கட்டி; திருவில் = வானவில்; தாமம் = மாலை; ஆலி = ஆலங்கட்டி / மழை; கோடணை = முழக்கம்; மண்ணுதல் = கழுவுதல்)

முல்லையும் காரும் (தலைவனும் தலைவியும்)

முல்லை நிலமே ஒரு தலைவியாம்; அவள் கணவன் கார் காலமாம். அவன் வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள் தேடிச் சென்றிருந்தானாம். கார் காலம் இடி முதலியவற்றால் முழங்குகிறது. அது பிரிந்து சென்ற கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கற்புடைப் பெண்ணின் நெஞ்சுக் குமுறல் போல உள்ளதாம். கார் காலம், கடல் நீரைப் பருகி விரைந்து வருகின்றது. அது தலைவன் பொருளைச் சம்பாதித்துத் தலைவியைக் காண விரைந்து வருவது போல உள்ளதாம். கார்காலத் தலைவனின் பிரிவாகிய வேனில் வெப்பத்தால் முல்லை நிலமாகிய தலைவி மேனி வாடிக் கிடக்கிறாள். ஆகையால் கார்த் தலைவன் தன் மேகத்தால் உலகமெல்லாம் ஒரு பந்தலைக் கட்டுகிறான். அப்பந்தலில் வான வில்லாகிய மாலையைக் கட்டித் தொங்க விடுகின்றான். மின்னலாகிய விளக்குகளை எல்லா இடத்திலும் மாட்டி வைக்கிறான். ஆலங்கட்டி மழையால் முல்லை நிலமாகிய தன் தலைவியை நீராட்டுகிறான். இவ்வாறு கார்காலமும் முல்லை நிலமும் அழகுற வருணிக்கப் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. இது போன்று பல்வேறு வருணனைகளைக் காப்பியத்தில் படித்து மகிழலாம்.
 

6.4.4 உவமை நலன்

பெருங்கதைக் காப்பியத்தின் சிறப்புகளுள் ஒன்று உவமை நலன் ஆகும். உவமைகளைக் கையாளுவதில் கொங்குவேளிரின் தனித்தன்மை வெளிப்பட்டுள்ளது. உரையாசிரியர்களும், பிற்கால ஆய்வாளர்களும் உவமையை விளக்குவதற்கு, கொங்குவேளிரின் பாடலையே மேற்கோள் காட்டினர்.
 

வாசவதத்தையின் அழகு

கொங்குவேளிர் உவமையை அமைத்து இயற்றிய பாடல்களுள் புகழ் பெற்றது ஒன்று உண்டு. அது வாசவதத்தையின் உருவ வருணனை ஆகும். கேசாதி பாதமாக (தலை முதல் கால் வரை) வாசவதத்தையின் எழில் உருவத்தைப் புலவர் பாடியுள்ள திறம் படித்து மகிழ்வதற்கு உரியது. உடலின் ஒவ்வோர் உறுப்பிற்கும் ஓர் உவமையைப் புலவர் அமைத்துள்ளார். பாடல் இதோ:

யாற்றுஅறல் அன்ன கூந்தல் யாற்றுச்
சுழிஎனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்
வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
பிறையெனச் சுடரும் சிறுநுதல் பிறையின்
நிறையெனத் தோன்றும் கறையில் வாள்முகம்
அரவென நுடங்கு மருங்குல் அரவின்
பையெனக் கிடந்த ஐதேந்து அல்குல்
கிளியென மிழற்றும் கிளவி கிளியின்
ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர் ....
வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்
விளங்கு முத்தன்ன துளங்குஒளி முறுவல்
காந்தள் முகிழ்அன்ன மென்விரல் காந்தள்
பூந்துடுப்பு அன்ன புனைவளை முன்கை

(பெரு. வத்தவ காண்டம், 11: அடிகள் 64 - 79)

(யாற்று = யாறு / ஆறு; அறல் = மணல்; யாற்றுச்சுழி = நீர்ச்சுழி; நவில் = விரும்பத்தக்க; கடை = கண்ணின் ஓரப்பார்வை; மழை = கருமை; பிறையின் நிறை = முழுமதி; கறை = குற்றம்; வாள் = ஒளி பொருந்திய; அரவு = பாம்பு; மருங்குல் = இடுப்பு / வயிற்றுப் பகுதி; பை = பாம்பின் படம்; ஐது = அழகு / மென்மை; அல்குல் = பெண்ணின் வயிற்றுப் பகுதி; மிழற்றல் = மழலை பேசல்; ஒள் = ஒளி பொருந்திய; உகிர் = நகம்; வேய் = மூங்கில்; முறுவல் = பற்கள்; முகிழ் = மொட்டு; துடுப்பு = பூங்கொத்து.)

வாசவதத்தையின் வடிவ அழகை முழுவதுமாக உவமை மூலம் விளக்குகிறார் புலவர். யாற்றில் நீர் ஓடுவதால் மணல் வெளி நெளிந்து நெளிந்து அறல்பட்டுக் கிடக்கும். அதுபோல் அவளுடைய கூந்தல் கருமை நிறமாகவும் நெளிந்தும் கிடக்கிறது. ஆற்றில் ஓடும் நீரில் சுழி தோன்றும். இது நீர்ச்சுழி எனப்படும். அந்த நீர்ச்சுழி போலக் குழிந்தும் விரும்பத்தக்கதாகவும் அவளுடைய கொப்பூழ் அமைந்துள்ளது. வில்லைப் போலப் புருவம் அமைந்துள்ளது. வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல அவளுடைய கருங்கண் காணப்படுகின்றது. அவளுடைய சிறிய நுதல் (நெற்றி) நிலவின் பிறை போல ஒளி வீசுகின்றது. முழுமதி போல அவளுடைய ஒளி பொருந்திய முகம் காணப்படுகின்றது. அவளுடைய பேச்சு கிளியின் பேச்சுப் போல மழலைப் பேச்சாக உள்ளது. கிளியின் மூக்குப் போல நகம் காணப்படுகின்றது. தோள் மூங்கிலைப் போல உள்ளது. மூங்கிலில் உள்ள முத்துகள் போல அவளுடைய பற்கள் ஒளி வீசுகின்றன. காந்தள் மொட்டுகள் போல விரல்கள் காணப்படுகின்றன. காந்தள் பூங்கொத்துப் போல அவள் முன்கை அமைந்துள்ளது.

இவ்வாறு ஏராளமான உவமைகள் மூலம் படிப்போர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில், புலவர் பெருங்கதையைப் படைத்துள்ளார். நாமும் படித்து மகிழ்வோமாக.
 

6.4.5 உணர்ச்சிகள் (மெய்ப்பாடுகள்)

காப்பிய மாந்தர்களின் உணர்வுகளை விளக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும்போது காப்பியம் விறுவிறுப்பைப் பெறும். உணர்ச்சிகளைச் சுவை என்றும் மெய்ப்பாடு என்றும் கூறுவர். மெய்ப்பாடு எட்டு வகைப்படும். அவை, ‘நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், சினம், மகிழ்ச்சி, பெருமிதம்’ என்பனவாம். மனிதர்களின் இந்த உணர்ச்சிகளை மையமாக வைத்துப் புலவர்கள் பாடல்களை இயற்றுவர். பெருங்கதையில் எட்டு வகை உணர்ச்சிகளும் சிறப்பான முறையில் அமைந்து கிடக்கின்றன. ஒன்றிரண்டு பாடல்களில் உள்ள உணர்வு நிலைகளை இனிக் காண்போம்.
 

அழுகைச் சுவை

உதயணன் வாசவதத்தையின் காதலில் மூழ்கிக் கடமையை மறந்து கிடந்தான். இதனால் அவன் தோழன் யூகி காதலரைப் பிரித்து வைக்கக் கருதினான். வாசவதத்தையைப் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்து முன்பு அவள் இருந்த மாளிகைக்குத் தீ மூட்டினான். தீயில் வாசவதத்தை இறந்து விட்டதாக அனைவரும் கருதினர். உதயணன் கடுந்துயரில் சோர்ந்து போனான். தீப்பற்றிய அரண்மனையில் புகுந்து வாசவதத்தையைக் காஞ்சனமாலை தேடுகிறாள். தேடிக் காணாதவளாய், வாசவதத்தை இறந்து விட்டதாகக் கருதிப் புலம்புகிறாள். அவளின் புலம்பல் பகுதி அழுகைச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். அப்பாடல் பகுதி இதோ:

நாவலந் தண்பொழில் நண்ணார் ஓட்டிய
காவலன் மகளே கனங்குழை மடவோய்
மண்விளக் காகி வரத்தின் வந்தோய்...
பொன்னே திருவே அன்னே அரிவாய்
நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்
வீணைக் கிழத்தீ வித்தக உருவீ...
புதையழல் அகவயின் புக்கனையோ...

(பெரு. இலாவாண காண்டம், 18 : அடிகள் 76 - 85)

(நாவலந் தண்பொழில் = நாவலந்தீவு / பாரதநாடு / நாவல் மரங்கள் நிறைந்த நாடு; நண்ணார் = பகைவர்; கனம் = பொன்; அன்னே = தாயே; கொங்கு = பூந்தாது / தேன் / மணம்; வித்தகம் = ஓவியம்; அழல் = நெருப்பு)

இப்பாடலின் பொருள் வருமாறு: “நாவலந் தீவினுள் பகைவரை வென்ற காவலன் மகளே! பொற்குழையை உடைய மடவோய்! உலகத்திற்கு விளக்குப் போன்றவளே! வரத்தினால் பிறந்தவளே! பொன்னே! செல்வமே! அன்னையே! நங்கையே! நல்லவளே! மாலை அணிந்தவளே! வீணை வித்தையில் சிறந்தவளே! ஓவியம் போன்ற உருவத்தை உடையவளே! நெருப்பில் புகுந்து உயிர் விட்டனையோ”.