1.0 பாட முன்னுரை

ஒரு நாட்டின் சமுதாய ஒழுகலாறுகளை, பண்பாட்டு அசைவுகளை, கலாச்சாரத் தோற்றங்களைத் தன்னுள் கொண்டதாய் ஒவ்வொரு இலக்கிய வடிவமும் திகழ்கிறது. அத்தகைய இலக்கிய வகைமைகளுள் காப்பியமே இவை அனைத்திற்கும் இடமளிப்பதாகக் காணப்படுகின்றது. தனிப்பட்ட மனித வாழ்க்கையினை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டாலும் சமூக வாழ்வியலைத் தெளிவுபடுத்துவதாகக் காப்பியங்கள் அமைகின்றன. இக்காப்பியங்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் உலக இலக்கியங்கள் அனைத்திலும் காணப்படுகின்றன. காலந்தோறும் இக்காப்பியங்கள் வடிவம், பாவிகம், கதைக் களன், அமைப்பு முறை ஆகியவற்றால் மாறுபட்டுத் திகழ்கின்றன.