2.5 தொகுப்புரை

உயர்திணை அஃறிணை என்னும் இரு திணைப் பெயர்கள் உள்ளன. இந்தத் திணைப் பெயர்கள் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை உயர்திணைக்கு உரியன. ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவை அஃறிணைக்கு உரியன.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும். ஒருமை, பன்மை என்று எண் இருவகைப்படும். மதிப்புக் கருதி ஒருவரைப் பன்மையில் குறிப்பிடுவதும் உண்டு. இதை மதிப்புப் பன்மை என்பர்.  ஒருவர் தம் முன்னால் இருப்பவரிடம் பேசும்போது பேசுகிறவர் தன்மை இடமாகவும் முன்னால் இருப்பவர் முன்னிலை இடமாகவும் குறிக்கப்படுவர். தன்மை, முன்னிலை அல்லாத இடம் படர்க்கை எனப்படும்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இடம் எத்தனை வகைப்படும்?
2. தன்மையை விளக்குக.
3. முன்னிலைப் பன்மை என்றால் என்ன?
4. படர்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
5. மூவிடப் பொதுப்பெயர் என்றால் என்ன?