1.2 சொல் பகுப்பு

இடைச்சொல்லைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குச் சொல் பகுப்பு முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் எழுத்து தனித்து நின்றோ, சில எழுத்துகள் சேர்ந்து நின்றோ, பொருள் தந்தால்தான் சொல் என்று ஆகும் என்பதைக் கண்டோம். ஒரு சொல் எவ்வாறு அமைகிறது, எவ்வாறு பொருளை உணர்த்துகிறது என்று அறிதல் அவசியம். அதற்குச் சொல்லில் அமைந்துள்ள உறுப்புகளைப் பகுத்துக் கண்டறிய வேண்டும். சொல்லில் அமைந்துள்ள உறுப்புகள் தாம் பொருள் தெளிவைத் தருகின்றன.

சொற்களின் அமைப்பு அடிப்படையில் அவை பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகைப்படும்.


1.2.1 பகுபதம்

பகுபதம் என்றால் பகுத்துப் பார்க்கக் கூடிய சொல் என்று பொருள்.

பகுபதம் பல உறுப்புகளைக் கொண்டிருக்கும் சொல். பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும். இவற்றுள் விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ஆகிய நான்கும் இடைச்சொற்களே ஆகும்.

பகுபத உறுப்புகளின் தன்மைகளை இனி விரிவாகக் காண்போம்.


• பகுதி

பகுதி எப்போதும் பகுபதத்தின் முதலில் நிற்கும்; பெயர், வினை, இடை, உரி என்னும் நான்குவகைச் சொற்களுள் ஒன்றாக அமையும்.

எடுத்துக்காட்டு

கண்ணன் - கண் - பெயர்ப் பகுதி
வந்தான் - வா - வினைப் பகுதி
மற்றவன் - மற்று - இடைப் பகுதி
கடியன் - கடி - உரிப் பகுதி

• விகுதி

விகுதி எப்போதும் சொல்லின் கடைசியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்.

எடுத்துக்காட்டு

கண்ணன் - ன் - ஆண் பாலை உணர்த்துகிறது.
வந்தேன் - ஏன் - தன்மை ஒருமையை உணர்த்துகிறது
வந்தது - து - ஒன்றன்பாலை உணர்த்துகிறது
வந்தீர் - ஈர் - முன்னிலைப் பன்மையை உணர்த்துகிறது.

இவ்வாறு விகுதி சொல்லின் இறுதியில் இருப்பதால் இதனை இறுதிநிலை என்றும் கூறுவார்கள்.


• இடைநிலை

இடைநிலை எப்போதும் சொல்லின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலத்தையாவது அல்லது பகுதி விகுதி இணைப்பையாவது காட்டும். பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இடைநிலை இரண்டு வகைப்படும்.

பெயர் இடைநிலை காலம் காட்டாது. வினை இடைநிலை காலம் காட்டும்.

எடுத்துக்காட்டு

அறிஞன் - அறி + ஞ் + அன்

இதில் ‘ஞ்’ என்பது பெயர் இடைநிலை. இது பகுதியையும் விகுதியையும் இணைத்தது.

வந்தான் - வா + த்(ந்) + த் + ஆன்

இதில் ‘த்’ என்பது வினை இடைநிலை. இது இறந்த காலம் காட்டியது.


• சந்தி

சந்தி என்பது புணர்ச்சி. இது சொற்களை இணைக்கிறது. சொல்லில் பகுதிக்கு அடுத்து வருவது.

எடுத்துக்காட்டு

படித்தான் - படி + த் + த் +ஆன்

என்று பகுக்க வேண்டும். இதில் பகுதியாகிய படி என்பதற்கு அடுத்துள்ள ‘த்’ சந்தி ஆகும். அதற்கு அடுத்துள்ள ‘த்’ காலம் காட்டும் இடைநிலை ஆகும்.


• சாரியை

சாரியை பெரும்பாலும் விகுதிக்கு முன்னால் நிற்கும். புணர்ச்சி அல்லது இன்னோசை ஏதேனும் ஒரு காரணம் பற்றி வரும். சிறுபான்மை சொல்லின் இறுதியில் நின்று இன்னோசையை உணர்த்தும்.

எடுத்துக்காட்டு

பட்டினத்தான் - பட்டினம் + அத்து + ஆன்

இச்சொல்லில் ‘அத்து’ எனும் சாரியை புணர்ச்சி பற்றி வந்தது. ஊரின் பெயரால் ஒருவனை அழைக்க, பட்டினம் + ஆன், ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்துப் பொருள் தர இந்த ‘அத்து’ துணை புரிகிறது அல்லவா? ஆகையால் இது புணர்ச்சி காரணமாக வந்தது.

நெஞ்சம் - நெஞ்சு + அம்

இதில் நெஞ்சுதான் பொருள் தரும் சொல். அம் என்பது அதனோடு இன்னோசைக்காகவே சேர்ந்துள்ளது.


• விகாரம்

பகுபத உறுப்புகளுள் விகாரமும் ஒன்று. இங்கு விகாரம் எனப்படுவது, பகுபத உறுப்புகள் ஒன்றொடொன்று இணையும் போது ஏற்படும் சிறு திரிபுகள் (மாற்றங்கள்) ஆகும்.

எடுத்துக்காட்டு

வந்தான் - என்ற சொல்லில் ‘வா’ என்பது பகுதி.

இப்பகுதி, ஏனைய உறுப்புகளோடு சேரும்போது ‘வ’ எனக் குறுகியது. அதனால் இது விகாரம் என்று கூறப்படும்.


• சொல்லும் உறுப்புகளும்

ஒரு பகுபதத்தில் எத்தனை உறுப்புகள் இருக்கின்றன என்று பகுத்துப் பார்க்க வேண்டும். இரண்டு முதல் ஆறு உறுப்புகள் உடைய பகுபதங்கள் உண்டு.

எடுத்துக்காட்டு

கண்ணன் - கண் + அன் = பகுதி + விகுதி என இரண்டு உறுப்புகள் மட்டுமே இருக்கின்றன.

வந்தனன் - என்ற சொல்லைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஆறு உறுப்புகள் இருப்பதை அறியலாம்.

வந்தனன் = வா + ந் + த் + அன் + அன்

பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி, விகாரம் ஆகிய ஆறு உறுப்புகளையும் இந்தச் சொல்லில் காணலாம். (‘வா’ என்பது ‘வ’ எனத் திரிந்தது விகாரம்).


1.2.2 பகாப்பதம்

பகுக்க முடியாத பதம். பகுத்தால் பொருள் தராது.

எடுத்துக்காட்டு


கண்
பிரித்தால் பொருள் தராது.
படி