1.4 இடைச்சொல்லின் இலக்கணம்

பெயர், வினை, இடை, உரி எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன்பே கண்டோம். இனி இடைச்சொல்லின் இலக்கணத்தையும் அதன் இயல்புகளையும் இலக்கண நூல்கள் வழி அறிந்து கொள்ளலாம்.

இடைச்சொல்லின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஏழாவது இயலும் (இடையியல்), நன்னூல் சொல்லதிகாரம் நான்காவது இயலும் (இடையியல்) விளக்கிக் கூறுகின்றன.

பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் ஆகியவற்றை ஒட்டி நின்று அவற்றின் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறும் தன்மையுடையவை இடைச்சொற்கள் ஆகும். இடைச்சொற்களுக்கு என்று தனியாக வேறு ஒரு செயலும் இல்லை. இந்தக் கருத்தைக் கூறும் நூற்பா:

இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே
(தொல்.சொல்.251)


(இடை = இடைச்சொல்)

இடைச்சொற்கள் பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலும் பின்னாலும் இணைந்து நின்று அப்பெயர், வினைகளின் பொருளை தெளிவுபடுத்தும். பெரும்பாலும் இவ்வகைச் சொற்கள் இருசொற்களுக்கு இடையே வருவதால் இவற்றை இடைச்சொல் என்று அழைக்கிறோம்.

எடுத்துக்காட்டு

ஐயோ இறந்தான்
=
ஐயோ என்னும் இடைச்சொல் வினைக்கு முன்னே வந்துள்ளது.
கொன்றான் கூகூ
=
என்பதில் வினையின் பின்னே கூகூ என்னும் இடைச்சொற்கள் வந்தன.
மற்றொன்று
=

மற்று என்னும் இடைச்சொல் பெயருக்கு முன் வந்தது.

குழையன்
=

அன் என்னும் இடைச்சொல் பெயருக்குப் பின் வந்தது.

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, இடைச்சொல் வினைச் சொல்லுக்கும் பெயர்ச்சொல்லுக்கும் முன்னோ பின்னோ வருவதைக் கண்டோம்.