1.5 இடைச்சொல் வகைகள்

நன்னூல் கூறும் இடைச்சொல் வகைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.

1) வேற்றுமை உருபுகள்
2) வினை விகுதிகள், காலம் காட்டும் இடைநிலைகள்
3) சாரியைகள்
4) உவம உருபுகள்
5) ஏ, ஓ, என்று போன்ற தம் பொருளை உணர்த்தும் சொற்கள்
6) செய்யுளில் இசையைக் கூட்ட (நிறைக்க) வரும் சொற்கள்
7) செய்யுளில் அசைநிலையாக வருபவை
8) அச்சம், விரைவு முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை

இவ்வாறு இடைச்சொல் எட்டு வகைப்படும். இக்கருத்தை நன்னூல் பின்வருமாறு கூறுகிறது:

வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசை நிலை
குறிப்பு என் எண் பகுதியில் தனித்து இயல் இன்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச் சொல்
(சூத்திரம் - 419)

(ஒப்பு உருபு = உவம உருபு)

இனி இவ்வகைகளின் விளக்கங்களைப் பாடம் இரண்டு மற்றும் மூன்றில் விரிவாகக் காண்போம்.