3.2 வினைமுற்றுத் தொடர்
 

வினைமுற்று என்பது ஓர் எழுவாயின் செயல் நிலையைக் காட்டி வாக்கியத்தை முடிக்கும் சொல்லாக அமையும்.

(எ.டு.)     கம்பன் பாடினான்.

இவ்வாக்கியத்தில் ‘பாடினான்’ என்னும் வினைக்குக் காரணமான பெயர் ‘கம்பன்’. எனவே கம்பன் என்பது இவ்வாக்கியத்தின் எழுவாய். கம்பன் செய்த செயலைக் குறிப்பிடும் வினைச்சொல் ‘பாடினான்’ என்பது. இது வினைப் பயனிலை என்றும் வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில் இடம்பெற்று ஆறு வகைப் பெயரையும் கொண்டு முடியும். இது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.

(எ.டு.)

செய்வாள் அவள் - பொருட்பெயர் கொண்டு முடிந்தது
குளிர்கிறது நிலம் - இடப்பெயர் கொண்டு முடிந்தது
வந்தது கார் - காலப் பெயர் கொண்டு முடிந்தது
வணங்கியது கை - சினைப் பெயர் கொண்டு முடிந்தது
சிறந்தது நன்மை - பண்புப் பெயர் கொண்டு முடிந்தது
உயர்ந்தது வாழ்க்கை - தொழில் பெயர் கொண்டு முடிந்தது

பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதல்அறு பெயர்அலது ஏற்பில முற்றே

(நன்னூல் : 323)

வினைமுற்று இரு வகைப்படும்.

1) தெரிநிலை வினைமுற்று
2) குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறையோ அவற்றில் சில, பலவற்றையோ காட்டும். மேலே எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்ட வினைமுற்றுகள் யாவும் தெரிநிலை வினைமுற்றுகள் என்பதை அறியலாம்.

செய்பவன் கருவி நிலம்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே
                              (நன்னூல் : 320)

குறிப்பு வினைமுற்று என்பது, வினைமுதல், கருவி, இடம், செயல் காலம், செயப்படுபொருள் என்னும் ஆறில் செய்பவனை மட்டும் காட்டும். இதுவும் பொருட்பெயர் முதலிய ஆறையும் கொண்டு முடியும்.

(எ.டு.)

நல்லன் அவன் - பொருட்பெயர் கொண்டு முடிந்தது
நல்லது நிலம் - இடப்பெயர் கொண்டு முடிந்தது
நல்லது கார் - காலப்பெயர் கொண்டு முடிந்தது
நல்லது கண் - சினைப்பெயர் கொண்டு முடிந்தது
நல்லது வெண்மை - பண்புப்பெயர் கொண்டு முடிந்தது
நல்லது பணிவு - தொழில்பெயர் கொண்டு முடிந்தது

பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே
                                         (நன்னூல் : 321)

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

தொகாநிலைத் தொடர்கள் யாவை?

(விடை)
2) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? (விடை)
3) வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? (விடை)
4) குறிப்பு வினைமுற்று எதைக் காட்டும்?
(விடை)
5) வினைமுற்றுத் தொடரின் பயனிலைகள் யாவை? (விடை)