4.0 பாட முன்னுரை

ஒரு பொருளை அறிவுடையவர்கள் எந்த முறையால் எப்படிச் சொன்னார்களோ அப்பொருளை அச்சொல்லால் அவர்கள் சொல்லிய முறையிலேயே சொல்வது மரபு ஆகும்.
 

விலங்கு/பறவை - இளமைப் பெயர்
குதிரை, ஆடு, கழுதை
குரங்கு, பாம்பு, பூனை
- குட்டி
பசு, ஒட்டகம், கவரி - கன்று
புலி, நாய், நரி, பன்றி - குருளை
அணில், கீரி - பிள்ளை
பறவை -  குஞ்சு
 
விலங்கு/பறவை - எழுப்பும் ஒலி
குதிரை - கனைத்தல்
கழுதை, மாடு, ஆடு - கத்துதல்
நாய் - குரைத்தல்
நரி, ஓநாய் - ஊளையிடல்
யானை - பிளிறுதல்

இவ்வாறு குதிரைக் குட்டி என்றும் குதிரை கனைத்தது என்றும் கூறுதலே அறிவுடையோர் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்து வரும் மொழி வழக்காகும். மொழியின் பல்வேறு கூறுகளில் இம்மரபு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை இனி அறியலாம்.

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே

(நன்னூல் - 388)