6.0 பாடமுன்னுரை

இப்பாடத்தில் சங்க கால அரசியல் எந்த நிலையைப் பெற்றிருந்தது என்பது பற்றிய செய்திகளைத் தக்க சான்றுகளுடன் காண முடிகிறது. மன்னனின் நிலை என்ன என்பதை அறிய முடிகிறது. அரசாளும் பதவியைத் தொன்றுதொட்டு மன்னனின் மூத்த மகனே பெற்று வந்தான் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது. மன்னனுக்கு என்று தனி வாள், முரசு, கொடி, மாலை, காவல் மரம், அமைச்சர், தூதுவர், ஒற்றர், படை போன்றவைகள் துணை புரிந்தன என்பது பற்றி அறியமுடிகிறது.

சங்க காலத்தில் ஊர்கள் அடங்கியதை ஊராட்சி என்றும், நகர்ப் புறங்கள் நிறைந்த இடத்தை நகராட்சி என்றும் கூறும் வழக்கம் இருந்தது தெரியவருகிறது.

பண்டைய தமிழகத்தில் வாணிபம் மிகவும் செழித்து ஓங்கி இருந்தது. ஆதலால் நாட்டின் பொருளாதார நிலையும் வளர்ச்சியுற்று இருந்தது.

இப்பாடத்தின் கீழ் சங்ககால மக்களின் வாழ்க்கை முறையையும் படித்துணர்வது அவசியமாகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கை முறையானது, இல்லற வாழ்வு, உணவு, குலம், கல்வி, கலை, விளையாட்டு என்றெல்லாம் சிறுசிறு தலைப்பின்கீழ் விளக்கப்படுகின்றது.