6.5 கடவுளும் சமயமும் தமிழகத்தில் தமிழருக்கு முன்பு வாழ்ந்திருந்த ஆதிகுடிமக்களின் கடவுள் கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக் கொள்கைகளும் ஒன்று கலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன. தமிழர் உயிர் துறந்த வீரர்களுக்கு வீரக்கல் நட்டு வணங்கினர். அக்கல் நடுகல் எனப்பட்டது. அந்நடுகல்லுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர். அணிமயில் பீலி சூட்டிப்
பெயர் பொறித்து (புறநானூறு, 264:3-4) பழந்தமிழர் பேய், பூதம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க (பதிற்றுப்பத்து,13:15) மேலும் தெய்வம் மரத்தின் அடியில் தங்கியிருந்தது என நம்பினர். கடவுள் மரத்தமுள் மிடை குடம்பைச் (அகநானூறு. 270-12) பழந்தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து நிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கடவுளர் உண்டு என எண்ணி அவர்களை வழிபட்டனர். குறிஞ்சி நில மக்கள் சேயோனையும், முல்லை நில மக்கள் மாயோனையும், மருத நில மக்கள் வேந்தனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும், பாலை நில மக்கள் கொற்றவையையும் கடவுளராக வழிபட்டனர். ஆரியர்கள் பல வேள்விகளை அரசனின் உதவியுடன் செய்தனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன். அம்மன்னன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தான். ஆதலால் இவனுக்குப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயர் வந்தது. கடவுளை நம்பிவந்த சங்க காலத்தில் ஊழையும், கடவுளையும் பொய்யெனக் கருதியவர்களும் வாழ்ந்து வந்தனர். கடவுள் என்ற சொல் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. சிவனே முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான். சிறு தெய்வவழிபாடும் சங்க காலத்தில் நிலவி வந்தது. கள்ளி நிழற் கடவுள், கூளி போன்ற சிறுதெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்பட்டது. |