6.6 சங்க காலத்தின் இறுதி

மதுரை மாநகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டிய நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சம் சுமார் பன்னிரண்டாண்டு நீடித்ததாகத் தெரிகிறது. இதனால் பலர் வெளியில் சென்று வாழ்ந்தனர்.

மேலும் ஆரியப் பண்பாட்டின் கலப்பினால் பழந்தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டது.

களப்பிரர் என்னும் பிரிவினர் தமிழகத்துள் படையெடுத்துச் சேர, சோழ, பாண்டியர்களை வென்று ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் பல இலக்கியங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்பர். இக்குலத்தவரின் காலத்தில் யாதொரு முன்னேற்றத்தையும் தமிழகம் அடையவில்லை. பலகலைகள் அழிந்தன. இவைகளோடு பழைய பண்பாடும் அழியத் தலைப்பட்டது. இவ்வாறாச் சங்க கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது.