1.5 களப்பிரர் காலச் சமுதாய நிலை

சங்க காலச் சமுதாயத்திற்கும் களப்பிரர்கள் காலச் சமுதாயத்திற்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாகக் களப்பிரர்கள் ஆட்சியில் சமுதாய அமைதி குலைந்தது. கொள்ளையும், கொலையும் மலிந்தன. அறம் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டைச் சாராத களப்பிரர்கள் தமிழ்ப் பண்பாட்டை அழிக்கத் தலைப்பட்டனர். மன்னர்களையும், நாட்டையும் புகழ்ந்து பாடும் சங்க காலத்து வழக்கம் மறைந்தது. கடல் கடந்த வாணிகம் தடைப்பட்டது. சீர் குலைந்த சமுதாயத்தைச் சீர்படுத்துவதற்கு அறிஞர் பெருமக்கள் முற்பட்டனர்.

அதே சமயத்தில் களப்பிரர்கள் பொருளாதாரத்தில் சமத்துவம் ஏற்படுவதற்கு முற்படலாயினர். அவர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி மதுரையை ஆளத் தொடங்கிய காலத்தில் பிராமணர்கள் பிரம்மதேயமாகச் (வரியில்லா ஊராக) சில ஊர்களைப் பெற்றிருந்தனர். வேள்விக்குடி என்னும் ஊர் அவற்றுள் ஒன்றாகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவர்களிடமிருந்து அவ்வூர்களைக் களப்பரன் என்னும் அரசன் பறிமுதல் செய்தான்.

இந்தக் காலக்கட்டத்தில் சமணமும், பௌத்தமும் பிறப்பால் மக்களிடையில் ஏற்றத்தாழ்வு இல்லை எனப் போதித்துக் கொண்டிருந்தன.