1.6 களப்பிரர் காலச் சமய நிலை

களப்பிரர் காலத்தில் தமிழகத்தின் வடக்கில் பௌத்தமும், பாண்டிய நாட்டில் சமணமும் உயர்வடைந்திருந்தன. நாகப்பட்டினம், பூம்புகார், உறையூர், பூதமங்கலம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரங்கள் கட்டப்பட்டிருந்தன. அவை சமயத் தொண்டும், சமுதாயத் தொண்டும், கல்விப் பணியும் ஆற்றி வந்தன. காஞ்சிபுரம் பௌத்த சமயத்திற்குப் பெயர் பெற்று விளங்கியது. தத்துவ ஆய்வு அங்கு நடைபெற்றது.

சமணமும் இக்காலத்தில் படிப்படியாக வளர்ந்து வந்தது. மதுரையில் நிறுவப்பட்ட திராவிட சங்கம் சமணக் கொள்கையைப் பரப்பி வந்தது. சமண ஆசிரியர்களான சமாந்தபத்திரன், சர்வநந்தி ஆகியோர் இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர். சமணப் பள்ளிகள் பல எழுப்பப்பட்டன. அருகனைச் சமணர்கள் கடவுளாக வணங்கினர். வைதிக சமயக் கருத்துகள் சிலவற்றை இவர்கள் ஏற்றுக் கொண்டனர். வாசுதேவன், பலதேவன் ஆகியோரைக் கடவுளாகக் கருதினர்.

இருண்ட காலத்தில் வைதீகம், சைவம், பிரமவாதம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம் முதலிய வேறு சமயங்களும் நிலவி வந்தன. இவற்றுள் சைவ சமயக் கொள்கைகள் நாடு எங்கிலும் பரவியிருந்தன. ஆலயங்கள் பல எழுப்பப்பட்டிருந்தன. சிவ வழிபாடும் நடைபெற்றது.

சமயங்கள் பல நடைமுறையில் இருந்தாலும் சமயச் சண்டைகள் நிகழவில்லை. களப்பிரர் காலத்தில் வாழ்ந்த திருமூலர், காரைக்கால அம்மையார் ஆகிய சைவ நாயன்மார் பாடிய நூல்களிலும், முதல் ஆழ்வார்கள் பாடிய திருவந்தாதி நூல்களிலும் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ பழித்துப் பேசும் எந்த ஒரு பாடலும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமயக் கருத்து வேறுபாடுகளைப் பட்டி மண்டபங்களில் சொற்போர் நடத்தித் தீர்த்துக் கொண்டனர். இதனை மணிமேகலை அறிவிக்கிறது.