5.6 தொகுப்புரை

இப்பாடத்தைப் படிப்பதன் மூலம் பிற்காலச் சோழர் ஆட்சியை நிறுவியவன் யார் என்பதை அறிந்து கொண்டீர்கள். பிற்காலச் சோழர்கள் விசயாலயன் பரம்பரை, முதலாம் குலோத்துங்கன் பரம்பரை என்னும் இரு பரம்பரைகளின் வழி வந்து அரசாண்டனர் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.

பிற்காலச் சோழ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தப் பலநாடுகளோடு போர் புரிந்தனர் என்பதை அறிந்துகொண்டீர்கள்.

பிற்காலச் சோழ மன்னர்கள் நாட்டில் நல்லாட்சியை அளித்தனர் என்பதையும், சைவ சமயத்தைப் பின்பற்றினர் என்பதையும் அறிந்துகொண்டீர்கள். மேலும் சீனம், கடாரம், கம்போடியா ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொண்டு வாணிபத்தைப் பெருக்கினர் என்பதையும் தெரிந்துகொண்டீர்கள்.

பிற்காலச் சோழ மன்னர்கள் கோயில்களைக் கட்டினர்; நீர்ப்பாசன வசதிக்காகக் குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர்; கட்டடக் கலைக்கு முக்கியத்துவம் அளித்தனர். முதலாம் இராசராசனும், அவன் மகன் முதலாம் இராசேந்திரனும் கோயில் கட்டடக் கலைக்கு மாபெரும் பணியாற்றினர். முதலாம் குலோத்துங்கன் சுங்க வரியைத் தீர்த்து அருளாட்சி புரிந்தான். இவற்றையெல்லாம் அறிந்துகொண்டீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சுங்கம் தவிர்த்த சோழன் யார்?
2.
வட கலிங்க நாட்டை ஆண்டு வந்த அரசன் யார்?
3.
முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கூறும் நூல் யாது?
4.
மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக விளங்கியவர் யார்?
5.
வைணவ சமயத்தாரிடம் பகைமை பாராட்டிய சோழமன்னன் யார்?
6.
தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலைக் கட்டியவன் யார்?
7.
இரண்டாம் இராசாதிராசனிடம் படைத்துணை வேண்டிய பாண்டியன் யார்?
8.
மதுரை நகரில் சோழ பாண்டியன் என்ற பெயரில் வீராபிடேகம் செய்துகொண்ட சோழ மன்னன் யார்?
9.
சோழப் பேரரசின் கடைசி மன்னன் யார்?