1.5 அயல்நாட்டு உறவு

பிற்காலப் பாண்டிய மன்னர்கள் தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி கண்டதால் இவர்களது பேரரசு விரிவடைந்திருந்தது. தங்களது நாட்டை விரிவுபடுத்திய பாண்டிய மன்னர்கள் அயல்நாட்டாருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.

  • சீனாவுடன் உறவு
  • பன்னெடுங் காலமாகத் தமிழகமும் சீனாவும் வாணிக உறவும், கலாச்சார உறவும் கொண்டிருந்தன. இவ்வுறவு பிற்காலப் பாண்டியரது காலத்திலும் தொடர்ந்தது. கி.பி. 1280 இல் முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் ஜமாலுதீன் என்பவரைச் சீனாவிற்குத் தூதுவராக அனுப்பினான்.

    பாண்டிய மன்னன் தூதுவரை அனுப்பியது போல் சீனநாடும் யாங்திங் பீ என்பவரைத் தூதுவராகப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இத்தூதுவர் கி.பி. 1282 இல் தாயகம் திரும்பினார். இதனைத் தொடர்ந்து முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1283, 1284 ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை தூதுக் குழுவைச் சீனாவிற்கு அனுப்பிவைத்தான். இதனால் சீனநாட்டுடன் மேலும் நட்புறவு வளர்ந்தது எனலாம். பாண்டிய மன்னனைப் போன்றே சீனநாடும் இரண்டாம் முறையாக ஒரு தூதுக் குழுவைத் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தது.