கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தில் புகழ் ஒங்கிய இரு வணிகர்களின்
மக்களாகத் தோன்றியோர். இருவரும் மணந்து கொண்டு இனிதே இல்லறம் நடத்திவரும்
காலத்தில், அந்நகரத்தில் கணிகையர் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியின்
அழகால் கவரப்பட்ட கோவலன் தன் மனைவியைத் தனியே விடுத்து மாதவி இல்லத்திலேயே
வாழ்ந்தான். ஒரு நாள் கடற்கரை மணல் வெளியில் இருவரும் அமர்ந்து யாழ்
வாசித்துப் பாடும்போது கோவலனுக்கு மாதவி மீது ஐயம் தோன்றிற்று. அவன்
தன் வீடு நோக்கிச் சென்றான்; தன் குறைகளை வெளிப்படையாகக் கண்ணகியிடம்
சொல்லி வருந்தினான்; தன் செல்வம் குறைவுற்றது பற்றிப் புலம்பினான்; இழந்த
பொருளை மீட்க மதுரைக்குச் செல்ல விரும்பினான்.
கண்ணகி
தன் விலையுயர்ந்த கால் சிலம்பை மூலப்பொருளாகக் கொடுத்தாள். இருவரும்
கவுந்தியடிகள் என்னும் சமணப் பெண் துறவி துணையுடன் மதுரை அடைந்தனர்.
கண்ணகி, ‘மாதரி’ என்னும் இடையர் குலத்துப் பெண் வீட்டில் அடைக்கலப்படுத்தப்பட்டாள்.
கோவலன் ஒரு சிலம்பை மட்டும் எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றான்.
பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனாக, ஒரு பொற்கொல்லனால் திருட்டுக்
குற்றம் சாட்டப்பட்டு, மன்னனால் கோவலன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த
கண்ணகி, பாண்டியன் அவையில் வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்று
மெய்ப்பித்தாள். தன் பிழை உணர்ந்த பாண்டியன் உயிர் துறந்தான். சினம்
அடங்காக் கண்ணகி மதுரையைத் தீக்கிரையாக்கினாள். மேற்கு நோக்கி நடந்து
சேரநாட்டை அடைந்தாள். அங்கே ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நின்றபோது,
தேவர்கள் வந்து இறந்த கோவலனை அவளுக்குக் காட்டி, தம் ஊர்தியில் அவர்களை
ஏற்றி விண்ணுலகிற்கு இட்டுச் சென்றனர்.
|
இக்காட்சியைக் கண்ட குறவர்கள் மலைவளம் காண அங்கு
வந்து தங்கியிருந்த
சேரன் செங்குட்டுவனிடம் அதனைத்
தெரிவித்தனர். உடனிருந்த அரசமாதேவியின் விருப்பப்படி
அவன்
கண்ணகிக்குச் சிலை நிறுவி, கோயில் கட்ட விரும்பினான்.
இமயமலையில்
கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி, தமிழர் வீரத்தைப் பழித்த கனகவிசயர்
தலைமீது அதனை ஏற்றிவந்து, வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் நிறுவினான்.
அவ்விழாவிற்குத் தமிழரசர்களும் குடகுநாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
இலங்கை மன்னன் கயவாகுவும் வந்தனர். அவர்கள் வேண்டுதலை ஏற்று அவர்களின்
நாட்டிலும் எழுந்தருளுவதாகப் பத்தினித் தெய்வம் வரம் கொடுத்தது. கண்ணகித்
தெய்வம் செங்குட்டுவனுக்கும் பிறருக்கும் காட்சியளித்ததோடு பாண்டியன்
குற்றமற்றவன் என்றும், தான் அவனுடைய மகள் என்றும், வென்வேலான்குன்றத்தில்
தான் எப்போதும் விளையாடப் போவதாகவும் கூறி மறைந்தாள். தேவந்தியின் மேல்
தோன்றி வரலாற்றைக் கூறினாள். |