1.0 பாட முன்னுரை அக வாழ்வாகிய காதலையும், புறவாழ்வின் சிறப்புக் கூறாகிய வீரத்தையும் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்தன. வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்கு உரிய நீதிக் கருத்துகளைச் சங்க காலத்துக்குப் பின்வந்த அறநூல்கள் வலியுறுத்தின. நம் பாடத்திற்குரிய காலப்பகுதியில் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) இறைவனை வழிபடும் வழிபாட்டுப் பாடல்கள் தோன்றின. இவை சமய இலக்கியம் எனப்படும். கடவுளை மக்கள் மனம் நாடியதன் வெளிப்பாடு சமய இலக்கியம் எனலாம். சமணரின் அருகன், பௌத்தரின் புத்தபிரான, சைவரின் சிவன், வைணவரின் திருமால் ஆகிய கடவுளர்கள் தமிழ் இலக்கியத்தில் வழிபடப் பெற்றனர். சமண மத இலக்கிய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், பௌத்த இலக்கியங்கள் என்று ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தரப்பட்டுள்ளன. |