4.2 சைவ இலக்கியங்கள்
அப்பர், சுந்தரர்,
சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள்
சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக்
கிடைத்தவை 8000 ஆகும். இதன்
தொடர்ச்சியாக இந்தக்
காலக்கட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.
சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை
நூலில்
மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை.
ஆனால்
மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம்
பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியன் காலத்தைச்
சேர்ந்தவர் எனலாம். இவரது காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
ஆகும்.
4.2.1 திருவாசகம்
திருவாசகத்தை
இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார். இது 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள்
உள்ளன. எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல்
அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது. திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும்.
உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை
கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில்
கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.
“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற
தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும். ‘எலும்பை
உருக்கும் பாட்டு’ என்று டாக்டர்.ஜி.யூ.போப்
கூறுவார்.
திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தாயுமானவர், இராமலிங்கர்
ஆகியோரது பாடல்கள் மாணிக்க
வாசகரது பாட்டு அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில்
இதன் செல்வாக்குப் புலப்படும். சிவனைப்
பற்றிய பக்திப்
பாடல்களின் தொகுப்பே திருவாசகம். அப்பாடல்கள்
இன்றும்
சைவர்களது வீடுகளில் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன.
பாடினால் மனத்தை நெகிழ்விப்பவை அவை.
மக்களிடையே
வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல்
வடிவங்களை
மாணிக்கவாசகர் பயன்படுத்தி உள்ளார்.
* |
இளம்பெண்கள்
உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும்
விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில்
மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும். |
* |
பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடியே பாடுவது பொற்சுண்ணம்
ஆகும். அந்தப் பாடல்களின் அமைப்பில்
மாணிக்கவாசகர்
இயற்றியது, திருப்பொற்சுண்ணம் ஆகும். |
* |
பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது,
திருப்பூவல்லி. |
* |
பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது
பாடும் பாடல்
வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகும். |
மாணிக்கவாசகரது உள்ளம் சிவனை மையமிட்டது.
உற்றாரை யான் வேண்டேன்; ஊர்
வேண்டேன் பேர்
வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே
(திருப்புலம், 3)
என்று தான் வேண்டுவது பற்றி அவர் கூறுவது
அவரது ஆழ்ந்த
பக்தியைப் புலப்படுத்தும்.
மாணிக்கவாசகர் மதுரையை
அடுத்த திருவாதவூரில் பிறந்தவர்.
ஆதிசைவ அந்தணர் இனத்தவர். அரிமர்த்தன
பாண்டியனின்
அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற
விருது
பெற்றவர். இயற்பெயர் வாதவூரர். ‘ஆளுடைய அடிகள், அழுது
அடியடைந்த அன்பர்’ என்றெல்லாம்
குறிக்கப்படுபவர்.
பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க
நாகப்பட்டினத்
துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில்
சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை
மறந்தார்.
கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில்
செலவிட்டார். மன்னனால் பல தொல்லைகளை
அடைந்தார்.
இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்று
அவரது வாழ்க்கைக் குறிப்பு உரைக்கும்.
திருவெம்பாவை
மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவெம்பாவை’.
இது திருவாசகத்தில்
ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில்
அதிகாலையில்
சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக்
கொண்டது.
திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில்
எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று
நீராடி பாவை வைத்து
வழிபடுவதைச் சொல்லுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.. (1)
என்று இறைவழிபாட்டுக்கு உயிர்களை ஆயத்தப்படுத்தும்
அழகு
நயமிக்கது.
திருப்பள்ளி
எழுச்சி
அதிகாலையில் எழுக
என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும்.
மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை
அந்நாளில்
இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத்
தூக்கத்திலிருந்து
எழுப்புவதாகப் பத்துப் பாடல்கள்
பாடியுள்ளார். இதுவும்
திருவாசகத்தில் ஒரு பகுதியே.
கீர்த்தித்
திரு அகவல்
மாணிக்கவாசகர் பாடியது. கீர்த்தி என்பது புகழ்.
சிவனது புகழைப்
பாடும் நூல் இது. அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும்
வகையிலும் அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன்.
வேட்டுவன் வடிவம் தாங்கியவன். வலைஞன் ஆக வந்து கெளிற்று
மீனைக் கொன்றவன்; உமையைக் கூடியவன் என்று போற்றுகிறார்
மாணிக்கவாசகர். இதுவும் திருவாசகத்தின் ஒரு பகுதியே ஆகும்.
திருவண்டப்
பகுதி
மாணிக்கவாசகர்
பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன்,
சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’
ஆகும்.
படைப்பாற் படைக்கும் பழையோன்,
படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்
(திருவண்டப் பகுதி : 13-16)
சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில்
குளிர்ச்சியை வைத்தவன்.
தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன்.
நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று
சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.
போற்றித்
திரு அகவல்
‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள்.
உலகில் உயிர்கள்
உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது,
போற்றித் திருவகவல் ஆகும்.
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
(அடிகள் :112-117)
4.2.2 திருச்சிற்றலம்பலக் கோவை
மாணிக்கவாசகர் அருளிய
மற்றொரு நூல், திருச்சிற்றம்பலக்
கோவை ஆகும். சிவன் பாட்டுடைத் தலைவன்.
தில்லையில்
சிற்றம்பலத்தில் உறையும் சிவன் தலைவன் ஆதலால்
இந்நூல்,
‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன்.
மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் -தலைவியின் அன்பு கலந்த
காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக்
கொண்டது. பாடல்களில் சொற்சுவை, பொருள் சுவை மிகுந்துள்ளது.
‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பர். பாடல்கள்
கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.
மீண்டாரென உவந்தேன் கண்டும்மை
இம்மேதகவே
பூண்டார் இருவர்முன் போயினரே புலியூரெனை நின்று
ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே
(திருக்கோவையார் - 244)
என்று தலைவி பாடுவதாக வரும்
பாடலில் பொங்கும் உணர்வு
வேகத்தைப் பாருங்கள்.
4.2.3 மாணிக்கவாசகர் வெளிப்பாட்டு முறைகள்
மாணிக்கவாசகரது பாடல்கள்,
‘திருப்பிச் சொல்லும் முறையில்’
அமைந்துள்ளன.
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்
காணேடீ
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் ஆயிடினும் (3)
என்றும்
தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான்
என்னேடீ!
தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு
(5)
என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே
திருப்பிச் சொல்லும்
முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும்
முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது
எனலாம்.
மாணிக்கவாசகரது பாடல்கள் எல்லோரது
மனதையும் கவர்பவை.
‘ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியை’
என்ற
திருவெம்பாவைப் பாடலையும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
எனத் தொடங்கும் சிவபுராணத்தையும், ‘முத்திநெறி
அறியாத
மூர்க்கரொடு’ எனத் தொடங்கும் அச்சோப் பதிகத்தையும் எழுதப்
படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் காதால் கேட்டு, மனப்பாடம்
செய்து, வெகு எளிதாகப் பாடுவதைக் காணமுடியும்.
திருத்தெள்ளேணம், திருச்சாழல்,
திருப்பொற்சுண்ணம்,
திருவம்மானை, திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன பலர் கூடிப்
பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.
*
|
நெல் முதலியவற்றைக் குத்தும்
போது பெண்கள் கை சோர்வு
தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’
என்பது.
இதைத் தான், ‘திருப்பொற்சுண்ணமாக’
மாணிக்கவாசகர்
அமைத்துள்ளார். |
*
|
விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி
வட்டமாக நின்று
கைகொட்டி ஆடும் போது
பாடும் பாடல் வடிவம்
‘திருத்தெள்ளேணம்’ ஆகும். |
*
|
தோழியர் இருவர் ஒருவரை ஒருவர்
வினாவி விடை கூறும்
விளையாட்டுப் பாடல், ‘திருச்சாழல்’ ஆகும். |
இங்ஙனம் சிறுபெண்களது
பாடல்கள் முறையமைய
மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது.
மாணிக்கவாசகரது திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும்
மிகச் சிறந்த பாவைப் பாடல்கள் ஆக இன்றளவும் திகழ்கின்றன.
|