5.6 உரைநூல்கள்வழி அறியலாகும் மறைந்த நூல்கள்

பல்லவர் காலத்தில் பல யாப்பிலக்கண நூல்கள் வடநூல் வழித் தமிழ் ஆசிரியர் பலரால் செய்யப்பட்டன என்பதை யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை உரை, தொல்காப்பியச் செய்யுளியல் உரை ஆகியவற்றில் கூறப்படும் நூல்கள் பற்றிய குறிப்பிலிருந்து அறியலாம்.

சங்க யாப்பு, பாட்டியல் நூல், மாபுராணம் என்ற யாப்பு நூல்கள் இக்காலத்தன. இலக்கிய நூல்களாக, முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, குடமூக்கில் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம், அடிநூல், அணி இயல், அமிர்தபதி, அரச சந்தம், அவிநந்தாமலை, ஆசிரியமுறி, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப்பாட்டு, தேசிக மாலை, பசந்தம், பாவைப்பாட்டு, பிங்கலகேசி, புணர்ப்பாவை, பெரியபம்மம், பொய்கையார் நூல் (களவழியன்று), போக்கியம், மணியாரம், மந்திரநூல், மார்க்கண்டேயனார் காஞ்சி, மதுவிச்சை, வளையாபதி முதலியன யாப்பருங்கல விருத்தியுரையில் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் இரண்டொன்று நீங்கலாக மற்றவை அனைத்தும் பல்லவர் காலத்தில் செய்யப்பட்டவை என்பது அவற்றின் வடமொழிப் பெயர்களைக் கொண்டே கூறலாம் என்பார் மா.இராசமாணிக்கனார்.

யாப்பருங்கலக் காரிகை உரையால் கலிதயனார் என்பவர் செய்த யாப்பு நூலும், பாடலானார் செய்த யாப்பு நூலும், பெயர் தெரியாப் புலவர் ஒருவர் செய்த யாப்பு நூலும் இருந்தன என்பது தெரிய வருகிறது.

தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் காணப்பெறும் நூல்கள் சிலவும் பல்லவர் காலத்தன. அவை யாழ்நூல், கந்தர்வ நூல், பருப்பதம், தந்திரவாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு, விளக்கத்தார் கூத்து முதலியன.