1.1 மனித மொழியின் தோற்றம்

மொழியைப் படைத்தவர் மனிதரே; மொழியைப் பயன்படுத்துபவரும் மனிதரே; மொழியை மனிதர் பழகிக் கொள்கின்றனர். தம் குழந்தைகளுக்கும் பழக்குகின்றனர். மனிதர் மொழியைப் பயில்கின்றனர். மனிதர் மொழியைப் பயில்விக்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் மொழியைப் பாதுகாக்கின்றனர். எனவே மொழி என்பதை ‘மனித மொழி’ (Human Language) - மனிதர்கள் பேசும் மொழி என்று கூறலாம். மனிதருக்கிடையில் மொழி எப்படித் தோன்றியது? இயற்கையாகத் தோன்றியது என்றால் உலக மக்கள் அனைவரும் ஒரே மொழியைத்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிறக்கும் விதம் ஒன்றுபோல் உள்ளது. இதுபோலப் பல ஒற்றுமைக் கூறுகள் இருந்தாலும் மனிதர் பேசும் பேச்சில், மொழியில் மட்டும் ஒரே தன்மை இல்லை. இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் வேற்றுமை உள்ளது. அந்தந்த இனத்தவர் அவரவர் மொழியை அமைத்துக் கொண்டனர். என்றாலும், ‘இப்படித்தான் பேச வேண்டும்’ என்று எல்லாரும் ஒன்று கூடி, திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. திட்டம் ஏதும் இல்லாமல், மக்களிடையே மொழி தோன்றியது, வளர்ந்தது, காலூன்றி நிற்கின்றது என்று கூறலாம்.