2.2 தமிழ் எழுத்து முறை

எழுதப்படுவது எழுத்து, ஒலியைக் குறிக்கும் குறியீடு எழுத்து. முதன் முதலில் தோன்றிய எழுத்து உருவ எழுத்து. பார்த்த உருவத்தை மனிதன் மணற் பரப்பிலோ, மலைப் பாறையிலோ வரைந்தது உருவ எழுத்தின் தோற்றப் புள்ளி. பின்னர் அதிலிருந்து தனது மனக்கருத்தைப் புலப்படுத்தும் வண்ணம் எழுதியது கருத்தெழுத்து. அதிலிருந்து மனக்கருத்தைச் சொல்ல முயன்று, எழுத முயன்று ஒலியெழுத்து உருவாகி இருக்க வேண்டும் என்பர்.

என்று படமிட்டுக் காட்டலாம். எழுத்துகளின் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த ஒலியைத்தான் இந்த எழுத்துக் குறிக்கிறது என்று வரையறை செய்யப்பட்ட பின் இலக்கியங்கள், இலக்கணங்கள் தோன்றியிருக்க வேண்டும். உலக மொழியில் உள்ள எழுத்து முறைகளை மூன்றாகப் பகுக்கலாம். அவை,

என்பன. ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் ஓவியமாக அமைவது ஓவிய எழுத்து முறையின் தனியியல்பு ஆகும். இந்த எழுத்து முறை சீனம், சப்பானியம் முதலிய மொழிகளில் வழக்கில் உள்ளது. அசை எழுத்து முறையில் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உயிரையோ அல்லது ஒர் உயிர்மெய்யையோ குறிக்கும். இந்திய மொழிகளின் எழுத்து முறைகள் அசைஎழுத்து முறை ஆகும். ஓவிய எழுத்து ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் அசை எழுத்தோ நூற்றுக் கணக்கில்தான் காணப்படுகின்றன. அசை எழுத்து உயிர், உயிர்மெய், மெய் என்னும் வகைகளைக் கொண்டிருக்கும். மெய் எழுத்துக்கு அசை இயல்பு இல்லை. ஆனால் உயிர் எழுத்தும், உயிர்மெய் எழுத்தும் அசை இயல்பைப் பெற்றுள்ளதால் பெரும்பான்மை கருதி இந்த எழுத்து முறை அசைஎழுத்து முறை என்று அழைக்கப்படுகிறது. ஒலி வடிவ எழுத்துகளை மொழிநூலார் ‘ஒலியன்’ என்று அழைப்பர். தமிழில் ‘க’ என்பது வரிவடிவால் ஒன்று, ஆனால் ஒலி வடிவால் இரண்டு. ஆம் ! இதில், ‘க்’ என்ற மெய்யும், ‘அ’ என்ற உயிரும் ஆக இரண்டு ஒலிஎழுத்துகள் இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள், (‘ஐகாரம், ஒளகாரம் ஆகிய உயிர்எழுத்துகள் தவிர) அனைத்தும் ஒலியன் எழுத்துகள் ஆகும். பிரெஞ்சு, செர்மன் முதலிய மொழிகளின் எழுத்து முறை ஒலியன் எழுத்து முறை ஆகும். இந்த எழுத்து முறையில் எழுத்துகள் மிகவும் குறைவாகவே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால்,

ஓவிய எழுத்து முறை - படத்தால் ஆனது.
அசை எழுத்து முறை - இரண்டு ஒலி இணைந்த எழுத்துமுறை
ஒலியன் எழுத்து முறை - ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து

என்று கூறலாம். தமிழில் இரண்டு மெய் எழுத்துகளை எழுதும்போது தனித்தனியாகத்தான் எழுதுவது வழக்கம். பிற இந்திய மொழிகளில் அவற்றைச் சேர்த்து ஒரே எழுத்தாக எழுதுவது உண்டு. அதற்குக் ‘கூட்டெழுத்து’ என்று பெயர். மூன்று மெய் எழுத்துகள் சேர்த்து எழுதப்படும் ‘ஒட்டெழுத்தும்’ உண்டு.

2.2.1 அசை தோன்றும் முறை

உயிரும், மெய்யும் சேர்ந்து, ஒலித்தற்கு எளியனவாக உள்ள அசைகள் தோன்றுகின்றன. நான், யான், யாம், நீ, நீர், தான், தாம் போன்றவை எல்லாம் ஓரசைச் சொற்கள் ஆகும். ஓர் எழுத்தே பொருள் தருவது உண்டு.

சான்று :

தீ - நெருப்பு
போ - போய் விடு

  • ஒலியழுத்தமும் பொருளும்
  • ஒலிப்பதில் அழுத்தம் தருவதைப் பொறுத்துப் பொருள் மாறுபடும்.

    எதிர்மறைப் பொருள்
    எள்ளல் பொருள்
    வினாப் பொருள்
    வியப்புப் பொருள்

    என்று வெவ்வேறு வகையாக ஒலித்து ஒலியழுத்தத்தாலேயே பொருளை வெளிப்படுத்த முடியும்.

    2.2.2 தமிழ் எழுத்துகள்

    தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 247 ஆகும். இந்தத் தமிழ் எழுத்துகளை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை உயிர்எழுத்து, மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்பன.

    தமிழில் உள்ள உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை 12 ஆகும். ‘அ முதல் ஒள வரை அமையும் இவற்றைத்தான் முதன்முதலில் நீங்கள் கற்றிருப்பீர்கள். ஒலிக்கும் கால அளவு பற்றி இவற்றைக் குறில் என்றும், நெடில் என்றும் கூறுவர். மெய் எழுத்துக்குப் புள்ளி உண்டு. ‘க்’ முதல் ‘ன்’ வரையிலான பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும். மெய்யெழுத்துகளை அவற்றின் உச்சரிப்பு மற்றும் பிறக்கும் இடம், ஒலியுறுப்புகளது செயல் ஆகியவற்றின் அடிப்படையில் வல்லின எழுத்து, மெல்லின எழுத்து, இடையின எழுத்து என்று மூன்றாகக் கூறுவது மரபு.

    க், ச், ட், த், ப், ற் - இந்த ஆறு எழுத்துகளும் வல்லின மெய் எழுத்துகள்
    ங், ஞ், ண், ந், ம், ன் - இந்த ஆறும் மெல்லின எழுத்துகள்.
    ய், ர், ல், வ், ழ், ள் - என்னும் இந்த ஆறும் இடையின எழுத்துகள்.

    உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். க் + அ = க. இப்படி ‘க முதல் ன’ வரை உள்ள பதினெட்டு எழுத்தும் ‘அ’ கரத்தின் சேர்க்கையால் வந்த உயிர்மெய்கள். இதுபோலவே, க் + ஆ = கா என்றும், க் + இ = கி என்றும் சேர மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகள் (18 x 12 = 216) தமிழில் உள்ளன. ஃ என்று மூன்று புள்ளிகளே வடிவமாக அமைவது ஆய்த எழுத்தாகும். ஆய்தம் என்றால் நுண்மை என்று பொருள், இங்ஙனம் 247 எழுத்துகள் தமிழில் உள்ளன. இவ்வளவு மிகுதி எழுத்துகள் ஏன் என்று எண்ணுபவர் உண்டு. எழுத்துகளைச் சுருக்கும் வகையில் ‘எழுத்துச் சீர்திருத்தம்’ செய்யப்படுகிறது. ‘ஐ’ என்ற எழுத்து ‘அய்’ என்றே வழங்குகிறது. ‘ஒள’ என்ற எழுத்து ‘ஒளவையார்’ என்ற சொல்லை வைத்துத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. ‘அவ்’ என்றும் குறிப்பிடலாம் என்று கூறுவர். இவற்றில் சில எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் வரும், சில எழுத்துகள் சொல்லின் முடிவில் வரும், சில எழுத்துகள் இடையிலும் வரும். அதுபற்றி,

    மொழிமுதலில் வரும் எழுத்துகள்
    மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்
    மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள்

    என்றும் வகைப்படுத்தலாம். புள்ளி வைத்த எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் வருவதில்லை. அதாவது, மெய் எழுத்துகள் முதலாக வரச் சொற்கள் அமையா என்ற ஒழுங்கு முறை தமிழுக்கு உண்டு.

    2.2.3 தமிழ் எழுத்து வகைப்பாடு

    தமிழ் எழுத்துகளின் ஒலி அமைப்பைக் கொண்டு முதல் எழுத்து, சார்பெழுத்து என இரண்டாகப் பகுக்கலாம். உயிர்எழுத்துகளும், மெய்யெழுத்துகளும் முதல் எழுத்துகளாகும். சார்பெழுத்து எப்போதும் மற்றோர் எழுத்தைச் சார்ந்துதான் வரும். தனித்து வராது. தனித்து வந்தால் பொருள் தராது.

    சார்பெழுத்துகள் பத்து வகை

    1)

    உயிர் மெய்
    2) ஆய்தம்
    3) குற்றியலுகரம்
    4) குற்றியலிகரம்
    5) உயிரளபெடை
    6) ஒற்றளபெடை
    7) ஐகாரக் குறுக்கம்
    8) ஒளகாரக் குறுக்கம்
    9) மகரக் குறுக்கம்
    10) ஆய்தக் குறுக்கம்

    இவை பற்றிய விளக்கத்தினை அடுத்து அடுத்து வரும் பாடங்களில் படிப்பீர்கள்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் I

    1.
    மொழியின் அடிப்படைக் கூறுகள் யாவை?
    2.
    பேச்சு எதை அடிப்படையாகக் கொண்டது?
    3.
    அடிப்படை ஒலி என்றால் என்ன?
    4.
    உலக ஒலிஎழுத்து எதற்கு உதவுகிறது?
    5.
    தமிழில் ‘மாத்திரை’ என்பது எதைக் குறிக்கும்?
    6.
    தமிழ் எழுத்துகளின் வகைகள் யாவை?
    7.
    சார்பெழுத்து என்றால் என்ன?
    8.
    சார்பெழுத்துகள் எத்தனை வகை?
    9.
    தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை யாது?