6.0 பாட முன்னுரை

மனிதர் பேசுவது மொழி. மனிதர் காதில் கேட்பதும் மொழியே. மனிதர் எழுதுவதும் மொழி. மனிதர் படிப்பதும் மொழி. மொழியைப் பற்றி மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். மொழி பற்றி உளநூலார் பலவகை ஆய்வுகள் செய்கின்றனர். மூளை வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உள்ளது. அறிவு வளர்ச்சி பெற்ற மக்கள் பேசும் மொழி பலவகைச் சொல்வளம், பொருள்வளம் மிகுந்ததாய் உள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கி உள்ள மக்கள் பேசும் மொழி சொல்வளம், பொருள்வளம் குறைந்த மொழியாக இருக்கிறது. ஒரு மொழியின் சொற்பொருள் வளமும், வறுமையும் பேசுவோரின் அறிவு வளத்தையும், வாழ்க்கை நலத்தையும் ஒட்டி அமைவதாகக் கொள்ளலாம்.

  • இரட்டை வழக்கு
  • தமிழில் பேச்சு மொழி, எழுத்து மொழி என இரட்டை வழக்கு உள்ளது. ஒரு வாக்கியத் தொடர் பேச்சு மொழியில் அமைக்கப்படுவதற்கும், எழுத்து மொழியில் அமைக்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு உண்டு. பேச்சுத் தமிழின் வாக்கியம் எளியது. சுருங்கியது, நேரானது, இயல்பானது, தெளிவானது. எழுத்துத் தமிழின் வாக்கியம் பெரும்பாலும் நீண்டது. செயற்கையாக அமைத்துக் கொள்வது. சிக்கலானது. காரணம் என்ன? பேசுபவர் எண்ணும் எண்ணங்களுக்கு உடனே ஒலிவடிவு தந்து அதை வெளிப்படுத்துகின்றனர். எனவே சுருங்கிய நேரத்தில், குறைந்த மூளை உழைப்பால் அமைந்தவை பேச்சு மொழி வாக்கியங்கள். எழுதுபவர் பற்பல எண்ணி அனைத்திற்கும் எழுத்து வடிவு கொடுத்து வெளியிடுகின்றனர். தமிழில் பேச்சு வாக்கியம் சராசரி இரண்டு சொற்கள் உடையது என்றும், எழுத்து வாக்கியம் நான்கு அல்லது ஐந்து சொற்கள் உடையது என்றும் கூறுவர். இவை போன்ற செய்திகளை இப்பாடம் ஆராய்கிறது