3.3 மெய்யெழுத்து மாற்றங்கள்

சோழர் காலத்தில் மெய்களும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின. பிற மெய்கள் இடையண்ண மெய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. உயிரிடை வந்த வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளாயின. ஒலிகளின் ஒருங்கிணைவு, மெய்மயக்கங்கள் என்று மெய்களும் பல விதமான மாற்றங்களை அடைந்தன.

3.3.1 மெய்யெழுத்துகள்

சோழர் காலத்து மெய்யொலிகள் பெரும்பாலும் பல்லவர் காலத்து மெய்களை ஒத்திருந்தன.

மெய்யொலிகள் சான்று
க் காண்
ச் சாண்
ட் படை
ப் படி
ம் மடி
ண் எண்
ன் என்
ய் காய்
வ் வதி
ப் பதி
ர் கார்
ல் கால்
ழ் பாழ்

மெய்யொலிகளின் பட்டியல்

க் ச் ட் ற் த் ப்
ண் ன்
ய் ழ் ர் ல் வ் ள்

• மாற்றங்கள்

மெய்யெழுத்து மாற்றங்கள் வருமாறு:

• மெய்கள் இடையண்ணச் சாயல் பெறல்

அ) இரட்டித்து வரும் தகரம் இரட்டித்த சகரமாதல்

முன்னே வரும் ஒலிக்கு ஏற்பப் பின்வரும் ஒலிகள் இடையண்ணச் சாயல் பெற்று ஒலிக்கப்படுவதுண்டு.

‘த்த்’ எனத் தகரம் இரட்டித்து வர, அதன் முன்னர் இடையண்ண ஒலி அல்லது முன்னுயிர் வரும் போது தகரம் சகரமாக மாறிவருகிறது.

சான்று:

வைத்த
>
வைச்ச
காய்த்த > காய்ச்ச

சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே இடையண்ண மூக்கொலி இரட்டித்து வருகிறது.

சான்று:

அஞ்ஞை
மஞ்ஞை
முஞ்ஞை

சோழர் காலத்தில் நுனிநாப் பல் ஒலியான தகர நகரம் போற்றப்பட்டு வந்த சூழலிலும், இடையண்ண ஒலியின் தாக்கத்தால் தகரம் சகரமாகி விட்ட நிலையைக் காண்கிறோம். சோழர் கால இறுதியில் மொழியிறுதி உகரமும் இகரமாகிறது.

வைத்து > வைச்சு > வச்சி

சோழர் காலத்துத் தமிழில் பல்லிணை மூக்கொலியே தொடர்ந்தது. மலையாளத்திலோ இடையண்ண மூக்கொலி தொடர்ந்தது. இடையண்ணமாதல் தமிழில் குறைந்த வழக்கு. ஆனால், பேச்சு வழக்கில் இந்த மாற்றம் உண்டு.

சான்று:

வைத்து > வைச்சு > வச்சி

• இடையண்ண ஒலி பல்லிசைச் சாயல் பெறுதல்

இடையண்ண ஒலிகள் பல்லிசைச் சாயல் பெறுதல் சோழர் காலத்தில் நிலைத்து விட்டது.

சான்று:

ஞாயிறு
>
நாயிறு
சண்டேஸ்வர > தண்டேஸ்வர
செருமுனை > திருமுனை

இதன் விளைவாகக் கொங்கு நாட்டில் ஞகர மெய் இடையண்ண வெடிப்பொலிக்கு முன்னர் மட்டுமே வந்து பிற இடங்களில் வழக்கிழந்து விட்டது.

• தடையொலிகளின் ஒலிப்பு ஒலி

பல்லவர் காலத்தில் தடையொலிகள் ஒலிப்புப் பெற்றமையைக் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் உணரலாம். இரு சூழல்களில் ஒலிப்பில் ஒலிகள் ஒலிப்பு ஒலிகளாக மாறுகின்ற தன்மையைக் கண்டோம்.

(1) உயிர்களுக்கு இடையில்
(2) மூக்கொலிகளை அடுத்து வரும் சூழலில்

உயிரிடைத் தடையொலிகள் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஒலிப்பு ஒலிகளாக இருந்தன. அதற்கு முன்பு வரை ஒலிப்பில் ஒலிகளாகத்தான் விளங்கின. இத்தடையொலிகள் ஒரே சொல்லின் ஒரே சூழலில் வெவ்வேறு வகையாக ஒலித்தன. இன மூக்கொலிக்குப் பின்வரும் தடையொலிகள் முதலில் ஒலிப்புடையனவாக இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பே பின்னண்ணத் தடையொலியைத் தாக்கியிருக்க வேண்டும்.

சான்று: அங்கனம் > அங்ஙனம்

ஆனால் சோழர் காலத்திலோ பிற தடையொலிகளிலும் மூக்கின ஒலியின் தாக்கம் தொடர்கிறது எனலாம்.

சான்று:

பெரும்பாணப்பாடி
>
பெரும்மாணப்பாடி
அம்பது > அம்மது

முதலில் மலையாளத்தில் நிகழ்ந்த இம்மாற்றம் பின்பு தமிழிலும் வளரத் தொடங்கிற்று.

• சில மெய்யொலிகள் ஒருங்கிணைதல்

பதினோராம் நூற்றாண்டுச் சோழர் கால இலக்கணமான வீரசோழியம் ளகர மெய் முடிவிற்குரிய சந்தி விதிகளை ழகர மெய் முடிவிற்கும் விரிவுபடுத்துகிறது.

சான்று:

வாள் + நாள்
>
வாணாள்
வாழ் + நாள் > வாணாள்

அ) ளகர ழகரம்

பதினோராம் நூற்றாண்டில் கேள் என்பது கேழ் எனக் கேழ்வி என்ற சொல்லில் எழுதப்பட்டுள்ளது. பின்னர்ப் பிற சொற்களிலும் இம்மாற்றம் காணப்படுகிறது.

சான்று:

களம்
>
கழம்
உப்பளங்களுக்கு > உப்பளங்கழுக்கு
வளம் > வழம்

ஆ) ழகர ளகரம்

ழகர மெய்யும் ளகர மெய்யும் ளகர மெய்யாக ஒன்றாதலைச் சில இலக்கண நூல் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தென் மாவட்டங்களில் வலுவாக நிலைபெற்று விட்ட மாற்றமாகிய ழகரமும் ளகரமும் ளகரமாக ஒன்றாதல் மிகவும் முக்கியமானது. இந்த ஒருங்கிணைதலின் அடையாளங்கள் எட்டாம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன.

சான்று:

கிழமை
>
கிளமை
கிழக்கு > கிளக்கு
புகழ் > புகள்

இ) லகர ளகரம்

இதுபோலவே லகர, ளகர மெய்களின் ஒருங்கிணைவும் காணப்படுகிறது. தற்போதைய ஈரோட்டுக் கிளைமொழியில் லகர ளகர மெய்கள் ஒன்றாகின்றன. இம்மாற்றத்திற்கான சுவடுகள் பழைய கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் மாற்றம் மிகக் குறைவாகவே காணப்படுவதால், அவற்றை எழுத்துப் பிழைகள் எனத் தள்ளிவிடலாம்.

• மெய் மயக்கம்

ஒன்பதாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் றகர ரகர மெய் மயக்கம் தோன்றியது. உயிரிடையே ஏற்பட்ட இம்மாற்றம் பதினோராம் நூற்றாண்டிலும் இருந்து வந்தது.

சான்று:

1
ற்க
>
ர்க்க
மேற்கு
>
மேர்க்கு
ற்ப்
>
ர்ப்ப
ஏவற்படி
>
ஏவர்ப்படி
2
ர்க்க
>
ற்க்
கார்க்களிறு
>
காற்களிறு
3
ர்க்க
>
ற்க
ஊர்க்கால்
>
ஊற்கால்
4
ர்-
>
ற்-
தரை
>
தறை
5
ற்-
>
ர்-
நிறுத்து
>
நிருத்து

• உயிர்களிடையே தடையொலி இழப்பு

உயிர்களிடையே தடையொலிகள் இழக்கப்படும் போக்கு ககர, சகர மெய்களைப் பொறுத்த வரையில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

சான்று:

வைகாசி
>
வையாசி
இசைத்த > இயைத்த
இகல் > இயல்

இச்சான்றுகளில் உயிரிடை வெடிப்பொலி இழக்கப்பட்டு இடையின யகர மெய் புகுந்துள்ளது.

இடையண்ணத் தடையொலியான சகரத்தைப் பொறுத்த வரையில் இலக்கிய மொழி யகரத்தைப் பெற்றிருக்க, தமிழில் சில கிளைமொழிகளும் பிற திராவிட மொழிகளும் சகரத்தைப் பெற்றுள்ளன.

சான்று:

இலக்கிய மொழி
கிளைமொழி / பிற திராவிட மொழி
உயர்ந்த
உசந்த
குயவர்
குசவர்
பையன்கள் -பயங்க(ள்)
பசங்க(ள்)
பெயர்
ஹெசரு (கன்னடம்)

• பிற மெய் மாற்றங்கள் (சில மெய்கள் மறைதல்)

அ) யகர மெய் மறைதல்

வேர்களின் இறுதியில் வரும் யகர மெய் பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் மறைந்து வருகிறது.

சான்று:

வாய்க்கால்
>
வாக்கால்
செய்த > சேத
மேய்ந்த > மேந்த

ஆ) ரகர மெய் மறைதல்

பதினோராம் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், ரகர மெய்யானது, நெடில் தடையொலி, இரட்டைத் தடையொலி, ந்த், இடையீடு, அரையுயிர் ஆகியவற்றிற்கு முன் மறைகிறது எனலாம்.

சான்று:

கீர்த்தியை
>
கீத்தியை
கார்த்திகை > காத்திகை
தளர்ந்த > தளந்த
அவர் நாடு > அவநாடு
பெண்டிர > பெண்டி
வார்த்து > வாத்து

இ) சில வடிவ மாற்றங்கள்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூலான நேமிநாதம் சில சொற்களின் வடிவ மாற்றங்களைக் குறிப்பிட்டுள்ளது. (நேமிநாதம் : சொல், நூற்பா, 36)

சான்று:

பெயர்
>
பேர்
பெயர்த்து > பேர்த்து
பொழுது > போது

இவ்வாறு சோழர் காலத்தில் மெய்களில் ஒரு மெய் வேறு மெய்யாக மாறியும், சில மெய்கள் ஒருங்கிணைந்தும், சில இடையண்ணச் சாயல் பெற்றும், சில மெய்கள் பல்லின மெய்யின் தாக்கத்திற்கு உள்ளாகியும் பல்வேறு விதமான மாற்றங்களை அடைந்து தமிழ் மொழியின் வளர்ந்த நிலையினை உணர்த்தி நிற்கின்றன.