4.3 வினையியல் மாற்றங்கள்
தமிழ் மொழியில் காணப்படும் சொல் வகைகளில்
வினைச்சொல் தனிச்சிறப்பு உடையது. பெயர்ச்சொற்களைப்
போல எண்ணிக்கையில் மிகுதியாக இல்லை எனினும் மொழியின்
கருத்து அமைப்பிற்கு வினைச்சொற்கள் மிக
இன்றிமையாதனவாக விளங்குகின்றன.
காலங்கள், வினை வகைகள், வினைமுற்று,
வினையெச்சம், வினைமுற்றோடு சேரும் இடைச்சொற்கள்
இவற்றிலெல்லாம் சோழர் காலத் தமிழில் சில வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
4.3.1 கால இடைநிலைகள்
வினைச் சொற்கள் காலம் காட்டும் இயல்பை உடையன.
தமிழ் மொழியில் வினைமுற்றுச் சொற்களில் இடையில் நின்று
காலம் உணர்த்துவதால் அவற்றைக் கால இடைநிலைகள்
என்கிறோம். வினைச் சொல்லின் பகுதியாக அமைந்தும்,
வினைச் சொல்லின் இறுதியாக அமைந்தும், ஒட்டுச் சொல்லாக
அமைந்து இவை காலம் காட்டுகின்றன.
வினை எனப்படுவது... , , , , , ,
நினையுங் காலைக் காலமொடு
தோன்றும் ,
(தொல்.
வினை.1)
என்று கூறப்படுவதிலிருந்து வினையின் பண்புகளுள் காலம்
காட்டுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது என்பதை
உணரலாம்.
சோழர் கால இலக்கணமான நன்னூல் இறப்பு,
நிகழ்வு,
எதிர்வு என்னும் முக்காலத்திற்குரிய இடைநிலைகளைத்
தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இறப்பு |
- |
த், ட், ற், இன் |
நிகழ்வு |
- |
கிறு, கின்று, ஆநின்று |
எதிர்வு |
- |
ப், வ் |
நன்னூலுக்கு முந்தைய இலக்கண நூலான
வீரசோழியம்தான் நிகழ்கால இடைநிலைகளை முதன்
முதலில் கூறுகின்றது. அவை வருமிடங்களையும்
தெளிவாக்குகிறது எனலாம்.
கின்று |
- |
பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால் |
கிறு |
- |
பிற இடங்கள் |
இறந்த கால இடைநிலை -ன்- கம்பராமாயணத்திலும்
பெரிய புராணத்திலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும்
மிகுந்த வழக்கில் வருகின்றது.
சான்று:
போன |
(பெரிய புராணம், 4074 : 3) |
ஆன |
(பெரிய புராணம், 18 : 3) |
போனாள் |
(நா.தி.பி, 2270 : 4) |
நிகழ்கால இடைநிலை கின்று சோழர் கால
இலக்கியமான பெரிய புராணத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளது.
சான்று:
மொழிகின்றோம் |
(பெரிய. கழறிற். புராணம் -
174) |
ஏகுகின்றோம் |
(பெரிய. ஏயர். புராணம் - 367) |
மற்றொரு நிகழ்கால இடைநிலையான கிறு
கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது.
சான்று:
பார்க்கிறேன் |
- |
கம்பராமாயணம், 1: 1185 :4 |
உதிக்கிறான் |
- |
கம்பராமாயணம், 6 : 2152:4 |
பழங்கால வழக்கில் இருந்த எதிர்கால இடைநிலையான
-த்- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும், காப்பியங்களான
கம்ப ராமாயணத்திலும், பெரிய புராணத்திலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்று:
புகுதிர் |
- |
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்,
1917:3 |
அஞ்சுதும் |
- |
பெரிய புராணம், 2.849:4 |
அறிதும் |
- |
கம்ப ராமாயணம், 1.235:4 |
சங்கத் தமிழில் எதிர்கால இடைநிலையான ககரம்
அம்முடன் சேர்ந்து வரும்.
சான்று:
வருகம்
காண்கம்
இவ்வடிவம் பெரியபுராணக் காலத்தில் காணப்படவில்லை.
ஆனால் ககரம் ஏன் விகுதியுடன் சேர்ந்து காணப்படுகின்றது.
சான்று:
உரைக்கேன் - பெரிய
புராணம், 120 : 53
4.3.2 ஏவல் வினை
தமிழ் மொழியில் ஏவல், வியங்கோள் என்னும் இரு
வினைப் பகுப்பைக் காணலாம். வெறும் வினைப்பகுதி மட்டுமோ
அதனுடன், விகுதியும் சேர்ந்தோ ஏவல் வினை அமைகிறது.
• ‘ஆய்’ விகுதி
இடைக்காலத்தில் சோழர் காலத் தமிழில் எதிர்கால
இடைநிலைகளுடன் ஆய் விகுதி இணைந்து ஏவல்வினை
உருவாகியிருப்பதைப் பெரிய புராணத்தில் காண முடிகிறது.
சான்று:
வருவாய் |
- |
பெரிய புராணம், 3740:1 |
வாராய் |
- |
பெரிய புராணம், 3740:3 |
• ‘ஈர்’ விகுதி
ஈர் விகுதியும் எதிர்கால இடைநிலையுடன் இணைந்து
ஏவல் வினையாக வருகிறது. இதைப் பெரியபுராணத்திலும்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் காணமுடிகிறது.
சான்று:
பேசுதீர் |
- |
பெரிய புராணம். 2655:1 |
பேசீர் |
- |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். 1868:3 |
இருப்பீர் |
- |
பெரிய புராணம் 3906:4 |
• ‘ஈர்கள்’ விகுதி
இரட்டைப் பன்மை விகுதியான ஈர்கள் என்ற விகுதி
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் மிகுதியாகக்
காணப்படுகின்றது.
சான்று:
உரையீர்கள் -
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1795:2
• ‘மின்கள்’ விகுதி
மற்றொரு ஏவல் இரட்டைப் பன்மை விகுதியாகிய
மின்கள் பெரிய புராணத்திலும் நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.
சான்று:
கேண்மின்கள் |
- |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்,
1795:2 |
தொகுமின்கள் |
- |
பெரிய புராணம், 2082:4 |
• ‘செய்யாதே’ வாய்பாட்டு ஏவல் வினை
இந்த வாய்பாட்டில் வருகின்ற எதிர்மறைப் பொருளைத்
தரும் ஏவல் வினைகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்
காணப்படுகின்றன.
சான்று:
தகர்த்தாதே |
- |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்,
5543 |
செய்யாதே |
- |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், 1852 |
4.3.3 வியங்கோள் வினை
வியங்கோள் வினை படர்க்கை இடத்திற்கே உரியதாகும்.
இவ்வினை ஐம்பாலிலும் ஒரே வடிவம் கொள்ளும். ஆனால்
சங்க காலத்தில் மூவிடத்திற்கும் உரியதாக இருந்து வந்தது.
படர்க்கை இடத்திற்கு மட்டுமே உரியது என்ற தொல்காப்பியர்
விதி பழைய காலத்திலேயே மாறிவிட்டது எனலாம். திணை,
பால், இடம் உணர்த்தும் விகுதி வியங்கோளில் இல்லை. சங்க
கால நிலையேதான் இடைக்காலத்திலும் நீடித்தது.
மூவிடத்திற்கும் உரியதாக வியங்கோள் வினை வந்துள்ளது. இது
தமிழ் மொழியின் வளர்ந்து வரும் நிலையைக் காட்டுவதாக
நன்னூலார் குறிப்பிடுகின்றார்.
சான்று:
தடந்தோள் வாழ்க!
பரந்து கெடுக!
போற்றி அருளுக!
விரைந்து நடக்க!
4.3.4 இயக்குவினை
பி, வி போன்ற விகுதிகள் சங்கம் மருவிய காலத்தில்
காணப்பட்டாலும், சோழர் காலத்தில்தான் மிகுதியாக வழக்கில்
இருந்து வந்தன. அவை மட்டுமன்றி இகர அளபெடையும்
காரண வினையை உணர்த்தும் உருபாக அக்காலக் கட்டத்தில்
காணப்படுகிறது.
சான்று:
சங்க காலம்
காண்டி
செய்வி
இரீஇ - புறநானூறு, 150:8
போர்ப்பித்து - புறநானூறு, 286:5
அறிவித்து - கலித்தொகை, 136:15
இகர விகுதி சோழர் கால இறுதியிலேயே மறைந்து விட்டது.
செய், வை, பண்ணு ஆகிய புதிய துணை வினைகள் காரண
வினை உருவாக்கத்திற்கு உதவுகின்றன.
சான்று:
செய் |
- |
வாழச் செய்தாய் (நா.தி.பி,
470:4) |
வை |
- |
செல்ல வைத்தனன் (நா.தி.பி, 27/9:4) |
பண்ணு |
- |
ஓடமிட வென்னைப் பண்ணி (நா.தி.பி, 2971:2) |
மேற்கூறியன தவிர, காண், கொள் போன்ற துணைவினைகளும்
அக்காலத்தில் காரண வினை காட்டுவனவாக விளங்கி அதன்
பின்னர் வழக்கிழந்து விட்டன.
சான்று:
காண் |
- |
உண்ணக் கண்டான் (நா.தி.பி,
1542:4) |
கொள் |
- |
உய்யக் கொண்டான் (நா.தி.பி, 216:3) |
4.3.5 எதிர்மறை வினை
தமிழ் மொழியில் உடன்பாட்டு வினைக்கும், எதிர்மறை
வினைக்கும் தனித்தனியே வடிவம் உண்டு. எதிர்மறை ஒட்டுகள்
வினையுடன் சேர்ந்த ஒட்டுகளாகவும், துணை வினையாகியும்
எதிர்மறைப் பொருளைத் தருகின்றன.
இவ்வெதிர்மறை ஒட்டு பொதுவாக வினைச்சொற்களின்
இடையில், கால இடைநிலை வழங்கும் இடத்தில் அதற்குப்
பதிலாக வழங்கும்.
ஆ, ஆத் ஆகிய ஒட்டுகளையுடைய எதிர்மறை வினை
சோழர் காலத்தில் மிகுதியாகப் பழக்கத்தில் இருந்து வந்தது.
அல், இல் போன்ற சங்க கால எதிர்மறை ஒட்டுக்கள் சோழர்
காலத்தில் வழக்கிழந்து விட்டன. சங்கத் தமிழில் இடம் பெற்ற
ஆம் என்ற எதிர்மறையும், சங்கம் மருவிய காலத் தமிழில்
இடம் பெற்ற ஆத் என்ற எதிர்மறையும் சோழர் காலத்தில்
நிலைபெற்றுவிட்டன. ஆத் என்பது சற்று வடிவம் மாறி ஆப்
என நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் வழங்கப்படுகின்றது.
இந்நிலை சங்க காலத்திலிருந்து தமிழ்மொழி வளர்ச்சி பெற்று
வந்துள்ளதை உணர்த்துகிறது எனலாம்.
சான்று:
அயராப்பாய |
- |
(நா.தி.பி, 3769.1) |
நில்லாப்பாய் |
- |
(நா.தி.பி, 3746.2) |
4.3.6 தன்மை முன்னிலை வினைமுற்றுக்கள்
மூவிட ஒருமை பன்மை வினைமுற்று விகுதிகள் சோழர்
காலத்தில் வளர்ச்சியடைந்த நிலையினைப் பல இடங்களில்
காண முடிகின்றது.
• தன்மை வினைமுற்று விகுதி
அ) தன்மைப் பன்மை விகுதி
தன்மைப் பன்மை காட்டும் வினைமுற்று விகுதியாகிய எம்
என்பது சோழர் காலத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றது.
சான்று:
ஆயினெம் |
- |
(பெருங்கதை 3.15-1) |
உண்டனெம் |
- |
(கம்பராமாயணம், 2.667:4) |
சங்க நூல்களில் தன்மைப் பன்மை காட்டும் ஓம்
விகுதி ஓரிரு
இடங்களில் காணப்பட, சோழர் காலத்திலோ மிகுந்து
காணப்படுகின்றது.
சான்று:
காண்கின்றோம் |
- |
(கம்பராமாயணம், 1:1137:1) |
இருக்கின்றோம் |
- |
(பெரிய புராணம், 3700:2) |
அறிந்தோம் |
- |
(நா.தி.பி, 531:3) |
ஆ) தன்மை ஒருமை விகுதி
வினைமுற்று விகுதிகளில் தன்மை ஒருமை விகுதியைக்
குறிக்கும் அன் விகுதியும், என் விகுதியும் புழக்கத்தில்
இருந்தன.
சான்று:
-அன் |
- |
உண்டனன் |
-என் |
- |
உண்பென் |
• முன்னிலை வினைமுற்று விகுதி
ஐ, ஆய் என்னும் விகுதிகள் முன்னிலை ஒருமையைக்
குறிக்கப் பயன்படுத்தப்பட்ட விகுதிகளாகச் சோழர் காலத்தில்
வழக்கத்தில் இருந்து வந்தன.
சான்று:
-ஐ |
- |
உண்கின்றனை |
-ஆய் |
- |
இயம்புகின்றாய்
இருக்கின்றாய் |
பல்லவர் காலத்தில் விகுதிகள் குறில்களாக இருக்க (அம்,
அன்), சோழர் காலத்தில் நெடில்களாக (ஆன்) மாறத்
தொடங்கின.
சான்று:
கண்டத்தன் |
- |
(அப்பர் தேவாரம், 5.19.5.) |
பங்கினன் |
- |
(அப்பர் தேவாரம், 5.19.9.) |
4.3.7 பொது வினைகள்
சோழர் காலத்தைச் சேர்ந்த
நன்னூலார் வேறு, இல்லை, உண்டு என்பனவற்றைப் பொது வினைகளாகக்
குறிப்பிட்டுச் செல்கிறார். இல்லை என்பது சிறுபான்மை இல்
எனப் பயன்படுத்தப்படுதலும் உண்டு.
உண்டு என்ற உடன்பாட்டுச்
சொல் இருதிணை ஐம்பாலுக்கும் உரியது என்று கூறும் நேமிநாதர் அன்று,
அல்ல ஆகிய எதிர்மறைச் சொற்களையும் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார்.
அன்று என்பது வடிவத்தால் ஒருமை, அல்ல என்பது வடிவத்தால் பன்மை. எனினும்,
இவையிரண்டும் ஒருமை, பன்மை வேறுபாடின்றிச் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டன
என்ற செய்தியும் தெரிய வருகிறது.
4.3.8 வினையெச்சங்கள்
வினையெச்சம் என்றால் என்ன என்று வீரசோழியம்
விளக்கவில்லை. நன்னூல்தான் வினையெச்சத்தின்
இலக்கணத்தைக் கூறுகின்றது. வினையையும், காலத்தையும்
மட்டும் வெளிப்படுத்திப் பால், வினை விகுதி இன்றி வருவன
என விளக்கம் தருகிறது நன்னூல். வினையெச்சங்கள் வினையில்
இருந்து பிறப்பன; மற்றொரு வினை கொண்டு முடிவன.
இவ்வினையெச்சத்தை உணர்த்தும் வாய்பாடுகள் பல உண்டு.
வினையெச்ச வாய்பாடுகளான செய்யூ, செய்பு என்ற
வடிவங்கள் சோழர் கால இலக்கியங்களில் இடம்பெறவில்லை.
செய என்னும் வினையெச்ச விகுதிகளான மார், இய, இயர்
என்பனவெல்லாம் வழக்கிழந்துவிட்டன. ஆனால் எதிர்மறை
வினையெச்ச விகுதிகளான மல், மை, மே போன்றன
சோழர் காலத்தில் மிகுதியாகப் பயின்று வந்துள்ளன.
சான்று:
மை |
கிடையாமை ஒழியாமை |
(பெரிய புராணம், 4034:2)
(நா.தி.பி, 4681) |
அல் |
அடையாமல் அறியாமல் |
(பெரிய புராணம், 2289:3)
(கம்ப ராமாயணம், 6:2035:4) |
மே |
காணாமே
அறியாமே |
(பெரிய புராணம்,1326:31
(நா.தி.பி, 79:2) |
சோழர் காலத்தில் ஆல், ஏல், இல்
என்பன
நிபந்தனை எச்ச உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சான்று:
ஆல் |
- |
தொழுதால் |
(நா.தி.பி, 1244:2) |
ஏல் |
- |
அறிதியேல் |
(நா.தி.பி, 573) |
இல் |
- |
உறங்காவிடில் |
(நா.தி.பி, 59:3) |
தொல்காப்பியர்
கூறிய செய்த, செய்யும் என்னும் இரு பெயரெச்ச வாய்பாடுகளோடு
நன்னூலார் செய்கின்ற என்னும் வாய்பாட்டுடன் மூவகைகளை விளக்கியுள்ளார்.
இது சோழர் கால மொழி வளர்ச்சி என்று கூறலாம்.
மேற்கூறிய இம்மாற்றங்களே அன்றிப் பழைய வடிவமான
செயின், செய்தால் என மாற்றமடைந்தது. படி (சொன்னபடி,
எழுதியபடி), இடத்து (வந்தவிடத்து; கேட்டவிடத்து) ஆகியன
இடைச்சொற்களாகவும் பயன்படுத்தப் பட்டன. இவ்வாறு சங்க
காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம் ஆகிய
பல்வேறு காலங்களைக் கடந்து, சோழர் காலத்தில் தமிழ்
வளர்ச்சி பெற்றுப் புதிய உருவங்களைப் பெற்றுள்ளது என்று
கூறமுடியும்.
|