1.5 நாட்டுப்புறக் கதைப்பாடல்களும் பெயர்களும்

தமிழகத்தின் மாவட்டந்தோறும் கதைப்பாடல்கள் உள்ளன. ஆனால் அவை கதை, சிந்து, மாலை, அம்மானை, கும்மி, கதைப்பாடல், வில்லுப்பாட்டு, ஊஞ்சல், குறம், காவியம், வனவாசம், வாக்கியம் என்று பலவகையான பெயர் முடிவுகளைக் கொண்டு விளங்குகின்றன. ஏறக்குறைய 240 கதைப்பாடல் நூல்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் ‘கதைப்பாடல்’ என்று முடிவுறுகின்ற நூல்களைவிட, ‘கதை’ என்று முடிகின்ற நூல்களே அதிகமாக உள்ளன.

அம்மானை

மதுரைவீரன் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை, கள்ளழகர் அம்மானை போன்றவை அம்மானை என்ற சொல் பாடல்களில் இடம் பெற்று வருவதால் இப்பெயர் பெற்றுள்ளன.

கும்மி
கும்மி

சிவகங்கைச் சரித்திரக் கும்மி, கட்ட பொம்மன் கும்மி போன்றவை கும்மிப் பாடலாக அமைவன. ‘கும்மி’ என்பது ஒரு வகையான இசையோடு பாடித் தாளத்தோடு கைகொட்டி வட்டமாகச் சுற்றி வந்து பாடுவதாகும். கதைப்பாடலாக வரும் கும்மி சிவகங்கை பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் மக்களால் நிகழ்த்தப் பெறுகின்றன.

கதை

சுடலை மாட சாமி கதை, சாஸ்தா கதை, சின்னத் தம்பி கதை போன்றவை நெல்லை, குமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் உடுக்கை, குடம், கட்டை, ஜால்ரா போன்ற இசைக் கருவிகளால் இசைத்து எடுத்துரைக்கப்படுபவை.

அண்ணன்மார்சுவாமி கதை உடுக்கை எனும் இசைக் கருவியின் துணையோடு கோவை, பெரியார், சேலம் மாவட்டங்களில் இசையோடு எடுத்துரைக்கப்படுகின்றது.

பாடப் படுதல்

கதைப்பாடல்கள் பெரும்பாலும் சிறுதெய்வங்களுக்காக எடுக்கப்படும் வழிபாட்டின்போதும் சடங்கின்போதும் பாடி எடுத்துரைக்கப் படுகின்றன. குறிப்பிட்ட வட்டாரத்தைச் சேர்ந்த தெய்வ வழிபாட்டின்போது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கதைப்பாடலே பாடப்படுகின்றது.

சென்னை போன்ற பெரு நகரங்களிலும் கதாகாலட்சேபம், உபன்யாசம் என்ற பெயரில் பாரத, இராமாயணக் கதைகள் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம்.

இன்றைய நிலை

இன்று கிராமங்களிலும் தொலைக்காட்சியின் ஆட்சி ஆரம்பித்து விட்டது. அதனால் கதைப்பாடல் நிகழ்த்துவதற்குப் பதிலாக, தொலைக் காட்சியில் திரைப்படங்களைக் கிராம மக்கள் திரையிட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக கதைப்பாடல் நிகழ்த்துகின்ற கலை, அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.