5.4 மொழிநடை

பாமர மக்கள் கதைகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாதாரண மொழிநடையில் கதைப் பாடல்கள் அமைந்துள்ளன என்று கூறலாம். மக்கள் இலக்கியமாக இவை விளங்குவதனால் மொழிநடையில் பலவிதமான உத்திகளைக் கையாண்டு கதைப்பொருளை எளிமையாக விளக்குகின்றனர். மக்களிடையே கதை கேட்கும் ஆவலைப் பெருக்குவதற்கும் முயற்சி செய்கின்றனர். பாடகர்களால் கையாளப்பட்ட உத்திகளுள் சிலவற்றைக் காணலாம்.

5.4.1 பாடல்கள்

பொதுவாகக் கதைப்பாடல்கள் தொடக்கம் முதல் முடிவுவரை ஒரே பாடல் என்று கருதும் அமைப்பில் உள்ளன. பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் பெரும்பான்மை நான்கு சீர்களைக் கொண்டுள்ளன. முதல் மற்றும் மூன்றாம் சீர் மோனையுடன் வருகின்றன. இரண்டிரண்டு அடிகள் எதுகையுடையனவாகவும் காணப்படுகின்றன. மிகுதியும் எதுகையின்றியே பாடப்பட்டுள்ளன. நான்கு சீர்களுக்கு மிஞ்சிய அடிகளும் சில சமயம் இடம் பெறுகின்றன. காலத்தால் பிந்திய பாலநாகம்மாள், மூட்டை சுமந்த முடிமன்னர் போன்ற கதைகளில் விருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இடையிடையே சிறிய உரைநடைப் பகுதி வரும் கதைகளும் உள்ளன.

பாடல் வரிகளுக்கு இடையே தனிச்சொற்கள் இடம்பெற்று, பாடல்களுக்குள் இடத்தை நிரப்புவதுடன் கருத்துத் தெளிவுக்கும் வழி வகுக்கின்றன.

பொன்னும் நவமணியும் பூமியும் காணிகளும் - அவன்
சாகிற மட்டுமன்றிச் சந்ததியும் அனுபவிக்கத்
தந்தான் மிகமகிழ்ந்தாள் தம்பிமார் அறுவரையும் - அங்கே
மறைவாயிருங்களென்று வாழ்வரசி ஏவினானே.

(ஏணியேற்றம்)

இரண்டு தனிச் சொற்கள் ஆசிரியருக்குக் கைகொடுத்து உதவியிருக்கும் முறையைச் சிந்தித்துப் பார்க்கலாம்.

5.4.2 உவமைகள்

கதைப்பாடல்கள் உவமைகளைப் பலவிதமாகப் பயன்படுத்திப் பாடலுக்கு அழகையும் பொருளுக்குத் தெளிவையும் கொடுத்துச் சிறக்கின்றன.

எதிர் எதிராகப் போரிடக் காத்திருக்கும் அல்லியையும் நீன்முகனையும் உவமைகள் வாயிலாக விளக்கிக் காட்டும் பாங்கைக் காணலாம்.

எலியைக் கண்ட பூனைபோல் எழும்பினாள் அல்லியம்மாள்
பசுவைக் கண்ட புலியைப்போல் பாய்ந்தானே நீன்முகனும்
யானைகண்ட சிங்கம்போல் அல்லி எழும்பினாளே
கொக்கைக் கண்ட ராஜாளிபோல் குதிக்கிறான் நீன்முகனும்

(அல்லி அரசாணிமாலை)

இவ்வாறு எதிரெதிர் அடுக்காய் இணையிணையாக உவமைகள் வருவது சுவையான ஒன்றாகும்.

· உவமை விளக்கம்

கதைப்பாடல்களில் உவமையைக் கூறி அதற்குரிய விளக்கம் கூறும் முறையும் உள்ளது.

கற்றாழை மேலே கல்லுவண்டி வந்தாக்கால்
கல்லுக்குச் சேதமோ கற்றாழைக்குச் சேதமோ
கல்லுவண்டிக்கு ஒக்குமையா காண்டீபன் பெற்றபிள்ளை
கற்றாழைக்கு ஒக்குமையா கண்ணில்லான் பெற்றபிள்ளை

(அபிமன்னன் சுந்தரி மாலை)

5.4.3 உருவகங்கள்

கதைப்பாடல்களில் அடுக்கடுக்காய் உருவகங்களைக் கூறிக் கருத்தைச் சிறப்பாக விளக்குவதும் உண்டு. வாழ்ந்த காலத்தில் கர்ணனைத் தேர்ப்பாகன் மகன் என்று ஒதுக்கி வைத்துப் பேசுகிறாள் அவன் மனைவியான பொன்னுருவி. பின்பு அவனைப் பற்றிய உண்மைகளை அறிந்ததும் அழுது புலம்புகின்றாள். அவளது அழுகையில் உருவகப் பழமொழிகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

தேர்ப்பாகன் என்றுன்னைச் சேராதிருந்தேனே
இடையனார் கொண்ட கொம்பாய் ஏங்கியிருந்தேனே
காட்டில் காய்ந்த நிலவானேன் கர்த்தாவே
கானலிலே பெய்ந்த மழையானேன் பர்த்தாவே

(கர்ண மகராஜன் சண்டை)

தன் தவற்றைத் தானே உணர்ந்து மனம்மாறி முன்செய்த பிழையின் இழப்பைச் சிறப்பாக விளக்க இந்த அடுக்கு உருவகங்கள் நன்கு பயன்பட்டுள்ளன.

5.4.4 பழமொழிகள்

பழமொழிகள் மக்களுக்கு மிகவும் பழக்கமானவை ஆகும். பொருளை உடனடியாக விளங்க வைக்கப் பழமொழி மிகச் சிறந்த சாதனமாக அமைகிறது. கதைப் பாடலாசிரியர்கள் பாடலுக்குத் தக்கவாறு சிறிய மாற்றத்துடன் பழமொழிகளைப் புகுத்தி இருப்பதைக் காணலாம்.

கான்சாகிபுவைப் பற்றி நவாப் முகம்மதலி கூறுவதில் பழமொழி ஒரு மாற்றத்துடன் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

வேலிக்கு நான்போட்ட முள்ளு இப்போ
காலுக்குப் பகையாக வந்ததே எனக்கு

(கான் சாகிபு சண்டை)

எவ்வித மாற்றமும் இன்றி,

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதுண்டோ...

(கர்ண மகராஜன் கதை)

என்றும் பழமொழிகள் இடம்பெற்றுள்ளன.

5.4.5 சொற்கள்

ஒலிக் குறிப்புச் சொற்கள் பேச்சு வழக்குச் சொற்கள், வேற்றுமொழிச் சொற்கள், சொல்லடுக்கு ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஒரு சிறப்பு முறையாகக் கருதினர்.

· ஒலிக்குறிப்புச் சொற்கள்

கதைப் பாடல்களில் ஒலிக் குறிப்புச் சொற்கள் நல்ல முறையில் பொருளை விளக்குவனவாகவும் மக்களுடைய ஆர்வத்தைப் பெருக்குவனவாகவும் உள்ளன. படைகள் போருக்குப் புறப்படும் காட்சியை விளக்கும் முறையைப் பார்க்கலாம்.

கணகணகண கணகணகணவென்று கத்திகள் மின்னுதுபார்
பளபளபள பளபளபளவென்று பட்டாக்கள் மின்னுதுபார்
தடதடதட தடதடதடவென்று குதிரைகள் நடக்குதுபார்

(தேசிங்குராசன் கதை)

கண்முன் காட்சியைக் காட்ட விரும்பும் கதையாசிரியரின் அரிய திறனாக இது காணப்படுகிறது.

· பேச்சு வழக்குச் சொற்கள்

கதைப் பாடல்களில் பேச்சு வழக்கிலுள்ள சொற்களையும் மிகப் பொருத்தமாக ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவை எளிதாகப் பொருளை விளங்கிக் கொள்வதற்குத் துணையாக அமைகின்றன.

சூரிய வனந்தாண்டிச் சுருக்காய் வருகிறாராம்
இடி விழுவான் சொன்ன சொல்லை
சொரணை கெட்ட பாதகனே

போன்ற பேச்சுவழக்குத் தொடர்களைக் காணலாம்.

· வேற்று மொழிச் சொற்கள்

மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் வேற்றுமொழிச் சொற்கள் கதைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இசுலாமியக் கதைப் பாடல்களில் அரபுச் சொற்களும் ஆங்கிலக் கம்பெனியுடன் தொடர்புபடும் வரலாற்றுக் கதைப் பாடல்களில் ஆங்கிலச் சொற்களும் வந்துள்ளன. அவை இயல்பாகவும் பொருள் சிறப்புடனும் பயன்படுத்தப் பட்டிருப்பதனால் குறையாகத் தோன்றவில்லை.

· சொல்லடுக்கு

ஒன்றைப் பெருமைப் படுத்துவதற்காக ஒரே சொல்லை இருமுறை அடுக்கும் மரபு உள்ளது.

பட்டணமாம் பட்டணமாம் காவிரிப்பூம் பட்டணமாம்
பட்டணமாம் பட்டணமாம் மதுராபுரிப் பட்டணமாம்

(கோவலன் கதை)

என்று கூறுவதைக் காணலாம். இந்தமுறை ஓர் ஒப்புக்கொள்ளப்பட்ட அமைப்புப் போன்று தோன்றுகிறது.

கூற விரும்பியதற்கு அழுத்தமும் பாடலுக்கு ஒலி அழகும் கொடுத்து, கதை விறுவிறுப்புக்கு வழிவகுக்கச் சில தொடர்கள் இரட்டித்துப் பாடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

அம்மா கேளும் அம்மா கேளும் என்னைப் பெற்ற தாயே

இதனை அடுத்து,

போய்விட்டு வாடா போய்விட்டு வாடா புத்தியுள்ள மகனே

(தேசிங்குராசன் கதை)

மகன், தாய் இருவரின் உணர்வும் உள்ளமும் இத்தொடர்களால் நன்கு விளங்கும்.

ஒரு காட்சியை உணர்ச்சியும் உண்மையும் புலப்படுமாறு விளக்குவதற்குச் சொற்களை அடுக்கிப் பாடியுள்ளனர். மாவுத்துக்காரனின் போராற்றலை விளக்கும் முறையைக் காணலாம்.

புலியைப் போலே புகுந்தானையா மோவுத்துக் காரனும்
தலைதலையாய் உருட்டிப்போடுகிறான் மோவுத்துக்காரனும்
சப்பைசப்பையாய் கிழித்துப் போடுகிறான் மோவுத்துக்காரனும்

(தேசிங்குராசன் கதை)

வியப்பு உணர்வினை விளக்க வியப்புச்சொல் ஒன்று இருமுறை அடுக்கி வருவதைப் பால நாகம்மாள் கதையில் பார்க்கலாம்.

அக்காடி அக்காடி அதிசயமாய்த் தோணுதடி