5.1 பொதுவுடைமையும் பொருளாதாரச் சமத்துவமும்

பொதுவுடைமை என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல் சமுதாயத்தில் எல்லோருக்கும் எல்லாப் பொருளும் கிடைக்கச் செய்வது ஆகும். உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை சமத்துவம் எனப்படும்.

சமுதாயம் என்பதற்கு மக்கள் தொகுதி என்பது பொருள். தனிமனிதன், தன் தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் இவர்களோடு சேர்ந்து குடும்பமாக வாழ்கின்றான். இந்தக் குடும்பம், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் என்று அது தொடர்கிறது. பல குடும்பங்கள் சேர்ந்து வாழும் இடம் ஊர், நகரம் எனப் பெயர் பெறுகின்றது. பல ஊர்களும் நகரங்களும் சேர்ந்து நாடு ஆகிறது - சமுதாயம் பிறக்கின்றது. எனவே, குடும்பம் என்ற அமைப்பே சமுதாயத்தின் அடிப்படையாய் அமைகிறது.

மனிதன் சேர்ந்து வாழும்போது விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல் பொறுத்துக் கொள்ளுதல், அன்பு செலுத்துதல், பிறரை மதித்தல் பிறர் துன்பங் கண்டு வருந்துதல், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் உழைத்தல், இயற்கையை ரசித்தல், இயற்கைச் சீற்றத்திலிருந்து காத்துக் கொள்ளுதல், வாழ்க்கை அனுபவத்தால் அறிவைப் பெறுதல், அறிவை வளர்க்க மேலும் கல்வி கற்றல், தாம் கற்றதைப் பிறருக்கு எடுத்துரைத்தல், அடுத்த தலைமுறைக்கு நூலாக எழுதி வைத்தல், ஆட்சி அமைப்பு, நிர்வாகம் முதலியவை நிகழ்கின்றன. இவை அனைத்திற்கும் சேர்ந்து வாழ்தல் என்ற சமுதாயப் பண்பே அடிப்படையாய் அமைகின்றது.

5.1.1 பாரதியும் சமுதாயமும்

நம்மிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிப்பிரிவுகள், சாதிப்போராட்டங்கள், சமயப் பிரிவுகள், சமயச் சண்டைகள், பெண் அடிமை, பெண் விடுதலை, கல்வி, கல்வி சார்ந்த கலைகள், ஒற்றுமைப் பண்பு, மனித நேயம் இவை அனைத்தும் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் பாரதியார் தம் பார்வையைச் செலுத்தியுள்ளார்.

சமுதாய அமைப்பில், வளர்ச்சி நோக்கில் ஏற்படும் சிறுமாற்றங்களைச் சமுதாயச் சீர்திருத்தம் என்றும், அதன் அடிப்படையில் தோன்றும் புதிய எழுச்சிகளைச் (renaissance) சமுதாய மறுமலர்ச்சி என்றும் கூறுவார்கள். பாரதியார் நம் சமுதாயத்தின் அடிப்படையை மாற்றிச் சமுதாய மறுமலர்ச்சியைக் காண விரும்பினார்.

5.1.2'செகத்தினை அழித்திடுவோம்'

இறைவன் படைப்பில் அனைத்து இயற்கை வளங்களும், விளைச்சலும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் ஒருசிலர் சொத்துகளைக் குவித்து இது எங்கள் உடைமை என்று கூறி, உழைக்கும் மக்களைப் பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கவிட்டுத் தாம் மட்டும் உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். இந்நிலை கண்டு பாரதியார்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

(சுதந்திரப்பள்ளு - சரணம் 4)

(நிந்தனை = பழிப்பு (disrespect))

எனப் பாடுகிறார்.

ஒரு சமுதாயத்தைச் சீர்குலைப்பவற்றுள், இல்லாமை, கல்லாமை, தீமை இம்மூன்றும் அடங்கும். இல்லாமை மிகக்கொடியது. எனவே, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்குவாழும் மனிதருக்கெல்லாம்’ எனப் பாரதியார் விரும்பினார்.

பசியின் கொடுமையை அனுபவித்து அறிந்தவர் பாரதியார். பசியால் உயிர்துடித்துச் சாகின்ற மக்களைப் பார்த்தபோது கொதித்தெழுகிறார். அக்கொதிப்பில் எழுந்த கவிதை தான்,

இனி ஒரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
செகத்தினை அழித்திடுவோம்

(பாரத சமுதாயம் - சரணம் 2)

என்பது.

இந்த உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனும் பசியினால் வருந்தக்கூடாது. அவ்வாறு பசியினால் வருந்தக்கூடிய சூழல் இருக்குமானால், அதற்குக் காரணமான இந்த உலகத்தையே அழித்துவிடுவோம் என்கிறார் பாரதியார்.

5.1.3 'தீயை அகத்தினிடை மூட்டுவோம்'

பாரதியார் வாழ்ந்த காலத்தில் ‘நாட்டுக்கு அரசியல் சீர்திருத்தம் தேவையா? சமுதாயச் சீர்திருத்தம் தேவையா?’ என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் சமுதாயச் சீர்திருத்தமே தேவை என்றார். சமுதாயம் சீர்மைப்பட்டால் மக்களால் அமைக்கப்படும் அரசியலும் செம்மைப்படும் என்பது பாரதியாரின் எண்ணம்.

எனவே, சமுதாயத்தில் வாழும் மக்கள் தம் அறியாமையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட வேண்டும்; அநீதி கண்டு பொங்கி எழவேண்டும், அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டும்; உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை ஒழிக்கப்படவேண்டும்; புரட்சி வெடிக்க வேண்டும், புதிய சமுதாயம் அமையவேண்டும் என்று பாரதியார் எண்ணினார். இரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியும் பிரெஞ்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சியும் போன்று இந்தியாவிலும் ஏற்படவேண்டுமெனக் கருதினார்.

தீயை அகத்தினிடை மூட்டுவோம்

என்றும்,

ஈயைக் கருடநிலை ஏற்றுவீர்

(பல்வகைப் பாடல்கள் - சொல்4)

என்றும் மக்கள் உள்ளத்தில் புரட்சிக்கனலை மூட்டுகின்றார்.

‘உன் உள்ளத்திலே சக்திக்கனலை மூட்டு, புது வேகமும் புது உற்சாகமும் ஏற்படும். தரையில் சுற்றித் திரிந்து அகப்படும் அசிங்கத்தை உண்டு, சமுதாயத்துக்குக் கேடு விளைவித்து வாழும் ஈயாக நீ வாழாதே! வானில் எழுந்து வட்டமிடும், கூரிய பார்வையும், இலக்கைப் பாய்ந்து சென்று எடுக்கும் ஆற்றலுமுள்ள கருடனாக நீ மாறுக. அப்போது இன்பம் வாழ்வில் மலைபோலக் கொட்டும். அப்போதும் துன்பம் ஏற்படலாம் அதைக்கண்டு துவண்டுவிடாதே. அதனை வெட்டிவீழ்த்து, வேகம் விவேகம் இந்த இரண்டும் உனக்குத்தேவை’

எனப் பாரதியார் கூறும் இப்பகுதி மக்கள் மனத்தில் தூவும் புரட்சி விதைகள் அல்லவா? பாரதியார் ஒவ்வொரு இந்தியக் குடிமகன் உள்ளத்திலும் சக்திக்கனலை மூட்டி, ஈயாக இருந்தவர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து கருடனாக மாறிப் புரட்சி செய்ய வேண்டும் என்கிறார். ஒற்றுமை உணர்வை வளர்க்கிறார்.

5.1.4 யாரும் இப்போது அடிமை இல்லை, அறிக!

மக்கள் சக்தியைப் பராசக்தியாகக் கண்டவர் பாரதியார். அதனால் இரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிக்குக் காரணம் பராசக்தியின் கடைக்கண் பார்வை தான் எனக் கூறுகின்றார்.

மாகாளி பராசக்தி உருசிய நாட்
      டினில் கடைக்கண் வைத்தாள், அங்கே;
ஆகாஎன் றெழுந்ததுபார் யுகப்புரட்சி

(புதிய ருஷியா - 1)

ஜார் சக்கரவர்த்தி என்ற கொடுங்கோலனின் ஆட்சியில் இரஷ்ய நாட்டில் பொய், சூது, தீமை எல்லாம் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்தன. விளைவு:

உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை;
      பிணிகள் பல உண்டு; பொய்யைத்
தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்கள்
      உண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;
      தூக்குண்டே இறப்பது உண்டு.....

(புதிய ருஷியா - 3)

இம்மட்டுமோ? "'இம்’ என்றால் சிறைவாசம்; ‘ஏன்’ என்றால் வனவாசம்" - இதை எல்லாம் கண்ட மக்கள் மாகாளி பராசக்தியைப் போல் வெகுண்டு எழுந்தனர் புரட்சிப் புயலாக! முடிவு:

இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
      ஜார் அரசன்.........

(புதிய ருஷியா - 5)

இத்தகைய மக்கள் புரட்சிக்கு இந்தியாவின் வீர இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சி அல்லவா ‘புதிய ருஷியா’ என்ற கவிதை!

5.1.5 'எல்லோரும் ஓர் நிறை'

பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, வறுமை இல்லாத, வளமான சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதியார் அந்தச் சமுதாயத்தில்,

எல்லாரும் ஓர்நிறை; எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(பாரத சமுதாயம், சரணம் - 4)

எனக் கூறுகின்றார். எல்லோரும் ஒரே சிறப்புத்தன்மை உடையவர். எல்லோரும் ஒரே மதிப்புடையவர், எல்லோரும் இந்நாட்டில் முழு உரிமைபெற்ற ஆட்சியாளர்கள் என்கின்றார்.

சமுதாயத்தின் மேடு பள்ளங்களாய்ச் செல்வமும் வறுமையும் காணப்படுவதைச் சமன்படுத்தி, நம்நாட்டில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்; இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்று ஆசைப்படுகின்றார் பாரதியார்.

அடிமைத்தனம் இல்லாத, ஏழ்மை இல்லாத, ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவுடைமைச் சமுதாயம் அமைய மக்கள் எண்ணத்தில் புரட்சி ஏற்படவேண்டும் என்றும்; அவ்வாறு அமையும் புதிய சமுதாயம் பொருளாதாரச் சமத்துவம் உடையதாக,

ஏழை என்றும் அடிமை என்றும்
      எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
      இந்தி யாவில் இல்லையே;
வாழி கல்வி செல்வம் எய்தி
      மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்ச
      மானமாக வாழ்வமே

(விடுதலை - 2)

என்று கூறும்படி அமையவேண்டும் என்றும் பாரதியார் விரும்புகின்றார்.

5.1.6 'கோடி வகைத் தொழில்கள் செய்வோம் ஓயுதல் செய்யோம்'

பாரதியார் விரும்பும் இன்பம் பெறவேண்டுமெனில் எல்லோரும் தொழில் செய்ய வேண்டும். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதித்தால் செல்வம் தானே வந்து சேரும். உடலை உறுதியாக்கிப், பல தொழில்கள் செய்து செல்வத்தைப் பெருக்கி இந்திய நாட்டை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்கிறார். ஆகவே

கூடும் திரவியத்தின் குவைகள்-திறல்
      கொள்ளும் கோடிவகைத் தொழில்கள்-இவை
நாடும் படிக்கு வினை செய்து-இந்த
      நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க

(யோகசித்தி - 6-9)

(குவைகள் = குவியல்கள் , திறல் = வெற்றி)

வரம் வேண்டுகிறார்.

இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டும். அதுவரை உறக்கம், ஓய்வு என்பதே நமக்கு இல்லை என்றும், பெரிய ஆலைகள் முதல் சிறிய பொருள்களாகிய குடைகள், உழுவதற்குப் பயன்படும் பொருள்கள் முதலியன நாமே நம் நாட்டில் செய்ய வேண்டும் என்றும் கருதி,

ஆயுதம்செய் வோம்நல்ல காகிதம் செய்வோம்
      ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்
      குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம்இரும் பாணிகள்செய் வோம்

(பாரத தேசம், 9,10)

என்றும் பாடியுள்ளார். இந்தியா கருத்துச் செலுத்த வேண்டிய துறைகள் இரண்டு எனக் குறித்தார். அவை:

1. உழவு

2. தொழில்.

இவையிரண்டும் தேக்கமுற்றுக் கிடந்த நிலை அவரால் பல பாடல்களில் குறிக்கப் பெறுகின்றது. இவ்விரு செயல்களும் சிறப்புற மனிதர்களிடம் சோம்பல் ஒழிந்து ஊக்கம் பிறக்க வேண்டும் எனக் கூறுகிறார்.