6.0 பாடமுன்னுரை

இ்ன்று பெண்ணியம் (Feminism) பற்றிப் பரவலாகப்
பேசப்படுகின்றது; சுருக்கமாகக் கூறின், பெண்ணியம் என்பது
இன்று ஓர் இயக்கமாகவே (Movement) இயங்கி வருகிறது.
இன்றைய பெண்களின் சிந்தனைகளைப் பாரதியார் பல
ஆண்டுகளுக்கு முன்பே தம் படைப்புகளில் அழுத்தமாகவும்
ஆழமாகவும் கூறியுள்ளார். இன்னும் குறிப்பாகச் சொல்ல
வேண்டும் என்றால், 'பெண் விடுதலை', 'பெண்கள் விடுதலைக்
கும்மி', 'புதுமைப்பெண்', 'பெண்மை'
என்னும் நான்கு
கவிதைகளில் பெண்ணியம் தொடர்பான எத்தனையோ
முற்போக்கான சிந்தனைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
கவிதைகளில் மட்டுமன்றி, தமது கட்டுரைகளிலும் கதைகளிலும்
வாய்ப்பு நேரும் போதெல்லாம் பெண்ணியம் பற்றிய பல்வேறு
கருத்துகளை எழுதிச் சென்றுள்ளார் பாரதியார். அவற்றை
எடுத்துச் சொல்ல முனைகிறது இப்பாடம்.

''பாரதி படைத்த பெண்ணுலகிலும் அவரது பார்வையின்
தெளிவும் திறனும் ஒளிவிடுகின்றன. அது நமது பழக்க
வழக்கங்களின், பாரம்பரியத்தின் திரைகள் அனைத்தையும்
ஊடுருவிக் காணும் பார்வை."என்பார்

- வா.செ. குழந்தைசாமி

(பாரதியின் அறிவியல் பார்வை, பக்-40-41)