6.5. பாரதி வாழ்கிறார் |
|
மனிதரில் மூவகையினர்
உள்ளனர். 1. வாழும் போதே இறந்து போனவர்கள். 2. வாழ்வு முடிந்து இறந்து போனவர்கள்
3. வாழ்க்கை முடிந்தும் இறவாத நிலையினர். பாரதி மூன்றாம் வகைக்குரியவர்.
நம் நாட்டையும் மொழியையும் சமூகத்தையும் நினைக்கும் போதெல்லாம் அவர் நம்
முன் வருகிறார். இராமனும் கண்ணனும், இயேசுவும் புத்தரும், சங்கரரும் இராமானுஜரும்
செத்துப் போய்விட்டார்கள்; நான் சாகாதிருப்பேன் என்று வைர நெஞ்சுறுதியோடு
முழங்கியவர். அவர் எழுதாமலும், பேசாமலும் போயிருந்தால், ‘வாழ்கிறார்’ என்று
கூற முடியாது.

அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ?
(பாரதி அறுபத்தாறு, மரணத்தை வெல்லும் வழி,
- 4)
என்பது பாரதி வாக்கு.
தம்முடைய இலட்சியங்களாலும்,
தொண்டாலும், வாழ்கின்ற மாமனிதர் பாரதியார். அவரை நினைவு
கூரும் வண்ணம் நாம் இருப்பதற்கு அவர் வாழ்ந்த பெருவாழ்வே
காரணமாகும்.
6.5.1 எதிர்கால நோய்கள்
இந்தியாவை
இன்று வந்து சூழ்ந்துள்ள எத்தனையோ சமூக நோய்கள் அகற்றப்படாமலிருக்கும் போது
எதிர்காலத்திலும் பல புதிய நோய்கள் வந்து தாக்கும் அச்ச நிலை உள்ளது. இந்தியாவின்
அகத்திலும் புறத்திலும் பலப்பல பகைகள் பெருகியுள்ளன. புறப்பகை அண்டை நாட்டினால்
தோன்றி வளர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க என்ன செய்வது? அகத்தே பகையின்றி
ஒருமைப்பாடு குலையாமல் இருப்பதே புறத்தே கொடும் பகை செயல்படாதவாறு தடுக்கும்.
அகத்தே ஆயிரம் ஆயிரமாய் வேறுபாடுகள் மலிந்து கிடக்கின்றன. பாரதிதாசன் கூறுவது
போல்,

வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்.
|
(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், 144-145)
(பேதம் = வேறுபாடு)
என்ற நிலை பெரும் அறைகூவலாகி இந்திய ஒருமைப்பாட்டை
அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. வெடிகுண்டு வீச்சுகள், தீவைப்புகள், இயந்திரத்
துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுதல் நிகழ்வுகள், வானூர்திக் கடத்தல்கள் என்பன
அடிக்கடி நிகழ்கின்றன. இவை எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படலாம். இவற்றைத்
தடுப்பது எங்ஙனம்?
சாதிபேதங்கள் கடந்த காலத்திலேயே உச்ச
நிலைக்குப்
போய்விட்டன. சாதி ஒழிப்புச் சீர்திருத்தங்கள் இன்று புகைந்து
போய்விட்டன. கலப்பு மணங்கள் ஒரு பக்கம் பெருகினாலும்,
சாதிக் கட்டுப்பாடுகள், சாதியிலிருந்து விலக்கங்கள் ஆகியனவும்
பெருகி வருகின்றன. இவற்றைத் தடுப்பது எப்படி?
இன்று பெண் படிக்கிறாள்; பணி செய்கிறாள்;
அலுவலகத்தை
ஆளுகிறாள்; நாட்டையே ஆளும் திறன் பெற்று உயர்ந்திருக்கவும்
காணுகிறோம். ஆனாலும் பெண்ணினம் விடுதலையும் உரிமையும்
பெற்று விட்டதாகக் கூறமுடியவில்லை. பெண்ணின் பணிச்சுமை
கூடியிருக்கிறது. அலுவலகத்தில்
பணி செய்பவள்
அடுப்பங்கரையிலும் பணி செய்கிறாள். இதனைப் போக்குவது
எப்படி?

சமூக அமைப்பில் வர வர அறம் தேய்ந்து வருகிறது. அறத்தின்
மீது கொண்ட நம்பிக்கை குறைந்து வருகிறது. இவற்றைச் சரி
செய்வது எவ்வாறு?
மேலே கூறியவற்றுக்கெல்லாம் பாரதி
மருந்தும் மந்திரமும்
வைத்திருக்கிறார். அவர் சிறந்த நாட்டு மருத்துவர்;
நாட்டுப்
பற்று மிக்க மருத்துவர்.
6.5.2 மருந்தும் மந்திரமும்
பாரம்பரியப் பெருமையும் நாட்டுப்பற்றும்
எதிர்காலத்தில் அச்சுறுத்தும் பலநோய்களையும்
எதிர்கொள்ள
வேண்டுமெனில் நாட்டுப்பற்று என்னும் மருந்தும், வந்தே மாதரம்
என்ற மருந்தும் வேண்டுமெனப் பாரதி அறிவுறுத்துகின்றார்.
ஒருவரது பாரம்பரியத்தைப் பற்றிய அறிவும் பெருமையும்
வேண்டும் என்கிறார்.

மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு
பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம் பெரும் நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே
(எங்கள்
நாடு, 2) |
(மாரத வீரர் = பெரிய இரத வீரர்)
இந்த உணர்வைக் காப்பாற்றும் கல்வியும்,
ஞானமும் வரும்
தலைமுறையினர்க்கு ஊட்டப் பெற வேண்டும்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி?
(வந்தே மாதரம், 3)
|
என்ற வலிமைமிக்க ஒருமைப்பாடு
வேண்டும்.
வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை வேண்டும். இந்து, முசுலீம்,
கிறித்தவர், சீக்கியர் என்ற மத வேறுபாடுகள் இந்தியர் என்ற
ஒருமையில் கரைய வேண்டும். இந்திய தேசியக்
கொடி
ஏற்றப்படுகிறது.

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்
- எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்
(மாதாவின்
துவஜம், 4)
|
தமிழர், கேரளர், தெலுங்கர்,
துளுவர், கன்னடர், ஒட்டியர்,
மராட்டர், இந்துஸ்தானத்தர், ராஜபுத்ரர், பாஞ்சாலர்
ஆகிய
எல்லாரும் சேர்ந்து கொடியினைக் காக்கின்றனர். அரசாங்கம்,
குடிமக்கள் எல்லாருடைய நலன்களையும் சமமாய் மதித்து காக்கும்
போது, கொடிக்கு மரியாதை தோன்றுகிறது. தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லாமல் பட்டினி கிடக்க விடாத சமூகத்தில் நாட்டுப்பற்று
தானே வேர்விடும்.
சாதி ஒழிப்பு
சாதியைக் கொண்டு மனிதனை மதிப்பிடாமல்
குணங்களைக்
கொண்டு மதிப்பிடும் நிலையைப் பாரதி அறிவுறுத்துகின்றார்.
‘வேதியராயினும் வேறு குலத்தவராயினும் ஒன்றே’ என்று
அவர் பாடினார். அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டதற்குச்
சிறிதும் வருத்தப்படவில்லை. எல்லோருக்கும் பூணூல் போட்டுப்
பிராமணராக்கிவிட வேண்டுமென்று அவர் கருதுகின்றார்.
அவருடைய சீர்திருத்தத்தால் இன்று பிராமணீயம் வலிமை
குன்றிவிட்டது. சாதி ஒழிப்புச் சிந்தனையால்,
முற்போக்கு
எண்ணம் கொண்டவர்களிடையே பாரதியார் இன்றும் வாழ்கிறார்.
பெண் உரிமை
ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம்
செய்து
கொள்ளலாம் விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ
அடிமையில்லை உயிர்த்துணை: வாழ்க்கைக்கு ஊன்று
கோல் : ஜீவனிலே ஒரு பகுதி
(தமிழ் நாட்டின் விழிப்பு,பாரதியார் கட்டுரைகள்
பக்.261)
|
என்று கூறிப் பெண்கள் ‘சாத்விகப் புரட்சி’ யால் தம் உரிமையை
நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார். கைம்பெண்களின்
மறுமணத்தைப் போற்றுகிறார். பெண்கள் பல தீமைகளிலிருந்தும்
விடுபடுவதற்குக் கல்வி ஒன்றே வழிவகுக்கும் என்ற அவரின்
கூற்று உண்மையாகி விட்டது. இன்று ஆண்களை
விட
எண்ணிக்கையில் மிகுதியாகப் பெண்கள் படிக்கிறார்கள்; தங்கள்
விருப்பத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப மணமகனைத்
தேர்ந்து
கொள்கின்றனர். இது பாரதி காண விழைந்த கனவு. அந்த கனவு
மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.
குழந்தைக் கல்வி
சமூக அமைப்பில் ஒவ்வோர்
அங்கத்தையும் வளர்ந்தபின்
திருத்துவது இயலாது. குழந்தை நிலையிலேயே கோணல் வளர்ச்சி
இல்லாதவாறு ஒழுங்குபடுத்த வேண்டும். அறத்தில் நம்பிக்கை,
ஒழுக்கத்தில் உறுதி, நன்னெறிகள் ஆகியவற்றை
இளம்
பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ
திடம் கொண்டு போராடு பாப்பா
(பாப்பா பாட்டு, 7, 10)
|
என்றவாறு குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நெறி
காட்டுகின்றார்
பாரதி. எதிர்காலச் சமூக நலிவுகளுக்குப் பாரதியாரின் சொற்கள்
மருந்தென்று கூறத்தக்கன; மந்திரமாகக் கூறித் தீமை அகற்றிக்
கொள்ளத் தக்கன.
6.5.3 சாகாததோர் சரித்திரம்
இது, என்றும் அழியாத ஒரு
வரலாறு கொண்டவர் பாரதி
என்பதைக் குறிக்கும்.
‘அச்சமில்லை அச்சமில்லை’
ஒரு கூட்டம் சோர்ந்து
தளர்ந்து இருக்கிறது. என்ன
நடக்குமோ என்று அச்சம் கொண்டிருக்கிறது. பணம், அதிகாரம்,
மேல்சாதி போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஆயிரம் பேராக
இருந்தாலும் எதிர்த்துப் போராட முடியுமா என்று அவர்கள்
கருதுகின்றனர். அவர்கள் குடிசைகள் எரிக்கப்பட்டு விட்டன.
அவர்களின் உறவினர் நெருப்பில் வெந்து மடிந்து விட்டனர்.
அவர்கள் அன்றாடம் உழைத்த உழைப்பில் கஞ்சி குடிப்பவர்கள்.
அவர்கள் ஒன்று திரண்டு அடுத்து என் செய்வது எனத் தேம்பித்
திகைத்து நிற்கையில் ஓர் இளைஞன் அவர்களின் முன்னால்
நின்று,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
(அச்சமில்லை, 2)
|
என்று பாடினான்; கூட்டத்தினர் ஆன்ம பலம் பெற்றனர். ஒன்று
கூடி ஆதிக்க சக்திகளை எதிர்த்துச் சத்தியாக்கிரப்
போர்
தொடுக்க முடிவெடுத்தனர். பாரதியே அவர்களின் போர்க்குரல்;
இன்றல்ல என்றைக்கும்.
சமய ஒருமைப்பாடு
ஒரு வழிபாட்டுக் கூட்டம் கூடுகிறது. இந்து முசுலீம்
கிறித்துவர்
எனப் பல சமயத்தினரும் கூடினர். எந்தச் சமயப்
பாடலைப்
பாடுவது? ஒரு நொடி தான் தயக்கம். பின்பு சிலர் முழங்கினார்:

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக்
கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள்
புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல
மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
(புதிய ஆத்திசூடி, காப்பு 1-8)
இது எல்லார்க்கும் நிறைவு. இந்தச் சமரச ஞானப் பாடலில்
பாரதி
வாழ்கிறார்.
பெண் உயர்வு
காலைச் செய்தித்தாளில் பரபரப்பு.
பெண் உயிரோடு
எரிக்கப்பட்டாள்; வரதட்சணைக் கொடுமை காரணமாம்.
விசாரணை நடக்கிறதாம். கொன்ற கணவன் செல்வாக்கு
மிக்கவனாம்; எப்படியும் வெளி வந்து விடுவான் என்று ஊர்
பேசிற்று. பெண்கள் திரண்டனர்; கூட்டம் கூட்டினர் என்ன
பேசுவது?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம் ; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.
(பெண்கள்
விடுதலைக்கும்மி, 6,7) |
எல்லோரும் ஒன்றிணைந்து பாடுகின்றனர். பாரதி,
வானிலிருந்து
தம் மீசையை முறுக்கி கொள்கிறார். இவைபோல எத்தனையோ!
கலப்புத் திருமணம்;
ஆலைகளின் முழக்கம்; கல்விக்
கூடங்களின் அணிவகுப்பு; ஆயுதங்களும் காகிதங்களும்
முழுவீச்சில் உற்பத்தி; மாநிலங்களிடையே வணிகப் பரிவர்த்தனை
(பண்டமாற்று) உழவுக்கும் தொழிலுக்கும் அரசு ஆதரவு. இவை,
எல்லாவற்றிலும் பாரதியின் முகம் பளிச்சென்று தெரிகிறது.
புரட்சி, புதுமை, பெருமை
மாணவர்களுக்குக் குறுவினாப் போட்டி
நிகழ்கிறது. ஆசிரியர்
தொடர்ந்து வினாக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.
1. |
பத்திரிகையில்
முதன்முதல் கார்ட்டூன் என்ற கருத்துப்படம் வெளியிட்டவர் யார்?
|
2. |
வாழ்க தமிழ்
என்று முதன்முதல் கவிதையில் இசைத்தவர் யார்? |
3. |
தாழ்த்தப்
பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து விட்டுத் தாம் பூணூல் அணியாத புரட்சிக்காரர்
யார்? |
4. |
வ.உ.சிதம்பரம்
பிள்ளையின் கப்பலோட்டிய தீரத்தைக் கவிதையில் பாடியவர் யார்? |
5. |
தமிழ்த்தாத்தா
உ.வே.சா அவர்களை ‘வறுமைக்கு அஞ்சாதீர்கள்’ என்று தேற்றிக் கவிதை இசைத்தவர்
யார்? |
6. |
மகாபாரதத்தில்
தருமன் சூதாடியமை க ண்டு ‘சீச்சீ’ என்று இகழ்ந்து பாடிய பெருமைக்குரியவர்
யார்? |
7. |
‘சுதந்திர
தேவி’ என்ற புதிய சக்தி வழிபாட்டைத் தொடங்கியவர் யார்? |
8. |
கண்ணனைச்
சேவகனாகவும் படைத்து மிக நெருக்கமாக உரிமை கொண்டாடிப் பக்தி இலக்கியத்தில்
புதிய பரிணாமம் அமைத்த புதுமைக்காரர் யார்? |
9. |
அக்கினிக்
குஞ்சு, நெருப்புச்சுவை, தந்தையர் நாடு, என்ற புதிய சொல்லாட்சிகளைப்
படைத்தவர் யார்? |
10. |
இந்திய
தேசிய விடுதலைப் போரில் தனி மனிதனாக இருந்து பல போராட்டங்களை நடத்திய
வீரமிக்க கவிஞர் யார்?
எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான் என்று கூறி அவ்விடை
‘பாரதி’ என்றனர். ஆம் பாரதி வாழ்கிறார்; என்றும் வாழ்வார். |
|
|
|