3.4 பாரதிதாசனின் புரட்சிப்பெண்
 

E

பாரதிதாசனின் புரட்சி மனத்தை அவருடைய பெண் பாத்திரங்களில் காணலாம். பல்வேறு படைப்புகளில் துலங்கும் அவருடைய பெண் பாத்திரங்கள் வருமாறு:


1. வஞ்சி - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
2. அமுதவல்லி - புரட்சிக்கவி
3. விஜயா - வீரத்தாய்
4. தங்கம் - குடும்ப விளக்கு
5. நகைமுத்து - குடும்ப விளக்கு
6. கிள்ளை - காதலா கடமையா
7. சுப்பம்மா - தமிழச்சியின் கத்தி
8. அன்னம் - பாண்டியன் பரிசு
9. பூங்கோதை - எதிர்பாராத முத்தம்

 

இப்பாத்திரப் படைப்புகள் தேவை ஏற்படும்போது கடும்புயலாக உருக் கொள்கின்றனர்; மற்ற சமயங்களில் குளிர் தென்றலாய் இதம் செய்கின்றனர். பெண்மையின் பன்முக ஆற்றலை இப்பாத்திரப் படைப்புகள் காட்டுகின்றன.


3.4.1 குழந்தை நிலையில்.......
 

குழந்தையாய் இருக்கும்போதே மொழி உணர்வும் வேண்டும்; தாய்மொழியில் தேர்ந்து சிறக்கப் பயிற்சியும் வேண்டும் எனக் கருதினார் கவிஞர்.



இளஞ்சேரனை நீயார் என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த்திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி ‘நான் தம்பி’ என்றான்
“தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்

(குடும்பவிளக்கு 4)

இளஞ்சேரன் கைக்குழந்தை; இளஞ்சேரனின் தமக்கை அமிழ்து. அமிழ்துக்கு ஆறு வயது. ஆறு வயதில் அவளிடத்தே மொழி உணர்வு எப்படி வந்தது? பெற்றோர் கொண்ட உணர்வு வழிவழியாய் வருதலையே கவிஞர் இங்ஙனம் காட்டுகின்றார். குழந்தைகளை வளர்க்கும் நெறி பற்றியும் பாரதிதாசன் கூறுவதை நாம் நினைக்க வேண்டும். ‘ஆல் ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்’ வலிமை பிள்ளைகளுக்கு வேண்டும் என்கிறார். ஆலமரமே விழுந்தாலும் இளம்பிள்ளையின் தோள்கள் தாங்க வேண்டுமாம். நல்ல பழக்கங்களைப் பிள்ளைகட்குக் கற்பிக்கக் கவிஞர் வற்புறுத்துகின்றார்.



இன்னம் தூக்கமா - பாப்பா
இன்னம் தூக்கமா?
பொன்னைப் போல வெயிலும் வந்தது
பூத்த பூவும் நிறம் குறைந்தது
உன்னால் தோசை ஆறிப் போனதே!
ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே!

(இளைஞர் இலக்கியம்)


என்று நல்ல நெறிகளை அறிவுறுத்தும் பாடல்கள் பலப்பல அவர் புனைந்தார்.


இன்று குழந்தைகள் நீங்கள்! எனினும்
இனி இந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
குன்றினைப் போல் உடல் வன்மை வேண்டும்
கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!

(இசையமுது)


என்று குழந்தை மனத்திலேயே தீமையை எதிர்த்துப் போராடும் விதையை விதைத்து விடுகிறார்.


3.4.2 மணப்பெண் நிலையில்......
 

நாணிக் குனிந்து, நாயகனின் முகம் பார்க்கவும் நடுங்கித் தூணுக்குப் பின்னால் நின்றே உலகைக் காணும் கோழைச் சமூகமாகப் பெண்கள் சமூகத்தைக் கருதினர் பழைய உலகத்தினர். புதியதோர் உலகம் செய்யப் புறப்பட்ட கவிஞர், திருமணப் பந்தலில் மணமகள் நகைமுத்து ‘வேடப்பனை நான் விரும்பியது உண்டு; வாழ்வின் துணைஎன்று கருதியது உண்டு’ என்று கூறச் செய்கிறார்.

புரட்சிக் கவிஞரின் குடும்ப ஓவியத்தில் வேலைக்காரிக்கு இடமில்லை. அப்படிச் சமுதாயத்தில் ஒருத்தியை உருவாக்குவதை அவர் விரும்பவில்லை. மணம் செய்து வந்த புதிதில் மணவாளன் தன் மனைவியைப் பார்த்து “நீ போய் கிளியோடு பேசுக; யாழ் இசை கூட்டுக; எனக்கு எண்ணெய் தேய்க்க வேலைக்காரியை அனுப்புக” என்கிறான். அவளும் போனாள். சிறிது நேரத்தில் முக்காடு போட்டுக் கொண்டு ஒரு வேலைக்காரப்பெண் வந்தாள். எண்ணெய் தேய்த்து விட்டாள். பணி முடிந்து அவள் திரும்பும் போது அவள் முக்காடு விலகியது. அப்போதுதான் மணவாளன் வேலைக்காரி போல வந்தது தன் மனைவியே என்று அறிகிறான்.


காட்சி


தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்
பொறுப்பிலாத் தோழி அறிவது உண்டோ

(குடும்ப விளக்கு)


என்று கேட்கிறாள் மணந்து வந்தவள். இப்படிப்பட்ட பெண்ணை மணந்து வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவை


பெண் இவளோ ஆண் நானோ என வேறு வேறாய்ப்
பிரித்துரை மாட்டாது பிசைந்த கூட்டமிழ்து


எங்கள் வாழ்க்கை என்கிறான் கணவன்.


3.4.3 முதியவள் நிலையில்
 


பல்லாண்டுகள் வாழ்ந்து நரைத்து முதிர்ந்த நிலை அடைகிறாள் தலைவி. அப்போதும் அவள் நெஞ்சிலே கணவனே குடியிருக்கின்றான். ‘என் கணவனை அந்த நாளில் நான் எப்படிக் காத்தேன் தெரியுமா? வெயில்பட்டால் உருகிவிடும் மெழுகுப்பாவை; மழை பட்டால் கரையும் கற்கண்டுப் பேழை; புயல் வீசினால் தாங்காத பூம்பொழில் என்றல்லவா நான் அவனைக் காத்தேன்’ என்கிறாள் தலைவி. இன்று நலிந்து மெலிந்து திண்ணையில் குந்திக் கிடக்கும் தன் முதிய கணவனை அந்தக்கிழவி மனத் தொட்டிலில் துயில வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கிறாள். ‘இன்றும் எனது ஐந்து புலன்களுக்கும் அவன் நினைவுகள் தேன்மழை அல்லவா பெய்கின்றன’ என்று மகிழ்கிறாள். முதியோர் காதலைப் பாரதிதாசன் பாடியது போல எவரும் பாடவில்லை.