5.6 தலைவியின் பொதுநல எண்ணம்
 

E

நாள்தோறும் நமது குடும்ப வாழ்வை மட்டும் கணக்காகச் செய்யும் நாம், நம் தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்தோமா? நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஏதாவது செலவு செய்தோமா? எல்லாரும் இப்படி இருந்தால் எப்படி நம் தமிழ் வாழும்? என்று அந்தத் தலைவி, தன் கணவனிடம் கேட்டாள்.

அதற்குத் தலைவன் சொன்ன பதிலைப் பாரதிதாசனின் பாடல் வழியாகக் காண்போம்.
 

வரும்படி வீதப்படி நான் தரும்படிக்கு
வாக்களித்தபடி கணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித் தமிழர் கழகத்தார்கள்
கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்!
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்கணக்கைப்
பேசிவிட்டாய்க் கண்டபடி

(குடும்ப விளக்கு - I, ‘பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்’)
 

என்று தமிழ்க் கழகத்தார்க்குப் பொருள் வழங்கியதை எடுத்துக் கூறினான் தலைவன்.
 

5.6.1 தலைவியின் தமிழ் உணர்வு
 

தலைவன் சொன்னதைக் கேட்ட தலைவி உள்ளம் மகிழ்ந்தாள். தான் அறியாமல் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்தாள்.
 

அப்படியா! அறியாதபடியால் சொன்னேன்
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்றத்தை
எப்படியாயினும் பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்களன்றோ?
மெய்ப்படி நம் அறிஞரின் சொற்படி நடந்தால்
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
முற்படில் ஆகாததுண்டோ? எப்படிக்கும்
முதற்படியாய்த் தமிழ் படிக்க வேண்டும்

(குடும்ப விளக்கு - I, ‘தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்’)
 

என்னும் வரிகளில் தலைவியின் தமிழ் இன உணர்வையும் மொழி உணர்வையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

குடும்ப அமைப்பு, கட்டுக் குலையாமல் சிறப்பாகத் திகழ்ந்தால் ஒரு நாடு முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் குடும்பத்தைச் சீராக நடத்துவதுடன் பொதுநல எண்ணமும் உடையவர்களாக இருந்தால் எண்ணிய குறிக்கோளை ஒரு நாடு விரைவில் சென்று அடையும் என்பதைப் பாரதிதாசன் குடும்ப விளக்கில் சிறப்பாகக் காட்டியுள்ளார்.