5.0 பாட முன்னுரை

பதினெண்கீழ்க்கணக்கில் அறநூல்கள் வரிசையில் ஆசாரக்கோவையும் முதுமொழிக்காஞ்சியும் ஐந்தாவது பாடமாக வருகின்றன. அறத்தை வலியுறுத்த எழுந்த 11 அற இலக்கியங்களில் இவை சிறந்த அறநூல்களாகத் திகழ்கின்றன.

ஆசாரக்கோவை, மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை விளக்கிக் கூறுகிறது. ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்பது பொருள். பொதுவாகக் கடவுள் வழிபாடு செய்கிறவர்கள் தினம் நீராடித் தூய ஆடை உடுத்து நல்ல உணவு உட்கொண்டு வாழ்கின்றனர். அவர்களை ஆசாரத்தோடு வாழ்கின்றவர்கள் என்று கூறுகிறோம். காலப்போக்கில் கடவுள் வழிபாடு செய்து நல்ல நெறிகளைக் கடைப்பிடித்துப் புறத்தே தூய்மையாக உடையவர்கள் ஆசாரம் உடையவர்கள் என்றாகிவிட்டது. இது முற்றிலும் தவறானது. உள்ளும், புறமும் தூய்மை உடைமையே ஆசாரமாகும். இவ்விருவகை ஆசாரத்தைப் பற்றியும் கூறுவதுதான் ஆசாரக்கோவை. ஐந்தாவது பாடத்தில் முதல் பகுதியாக ஆசாரக்கோவையைப் பார்க்கப் போகிறோம்.

இந்தப் பாடத்தின் இரண்டாம் பகுதியாக நாம் பார்க்க இருப்பது முதுமொழிக்காஞ்சி. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. இந்தத் துறையின் பெயரையே தலைப்பாகக் கொண்டு இந்த நூல் விளங்குகிறது.