5.6 சிறப்பானவை

நம் வாழ்க்கையில் சிறப்பானவையாகப் பல அமைந்துள்ளன அவற்றுள் எவை எவை சிறப்பானவை, அவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது, என்பன பற்றி முதுமொழிக் காஞ்சி பல கருத்துகளை வழங்கியுள்ளது.

5.6.1 சிறப்பை அறிதல்

சிறந்தனவற்றைக் கூறியபின் அவற்றை அறியும் வகைகளைக் கூறுவது முறையல்லவா? ஒருவன் மனத்தில் இரக்கம் உடையவன் என்பதனை அவன் பிறர்க்குக் கொடுக்கும் முறையினால் அறியலாம். உயர்ந்த நட்புடைமையை அவன் நண்பர்களுக்குச் செய்யும் உதவியினால் அறியலாம்.

சோரா நல்நட்பு உதவியின் அறிப
(அறிவுப் பத்து : 3)

(சோரா = தளராத)

ஒருவனுடைய தவறுகளை அவனது மாறுபாடுள்ள சொல்லால் அறியலாம்.

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு
(குறள்:642)

என்ற குறட்பா சொல்லின் வன்மையை, வலிமையை வலியுறுத்துகிறதல்லவா? எனவே சொல்லின்கண் சோர்வு என்பது கூடாத ஒன்று.

சொல்லின்கண் சோர்வு இருந்ததால் தான் பாண்டிய மன்னன்,

தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன
(சிலப்பதிகாரம்,16,151-153)


என்று கூறினான், கோவலன் மாண்டான். சொல்லில் சோர்வு இல்லாவிடில், ‘கொல்ல அச்சிலம்பு கொணர்க’ என்று கூறியிருப்பான். எனவே சொல்கிற சொற்களில் இந்தப் பிழை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்பிழையை நீக்கிக் கொள்ளாத ஒருவன் தன்னிடத்தில் உண்டாகும் வேறு எந்தப் பிழைகளையும் அறிந்து கொள்ள மாட்டான். ஏனென்றால் இந்தப் பிழை அவனுடைய மற்றப் பிழைகளை அவன் அறியாமல் செய்துவிடும். ஆனால் மற்றவர்கள் அவனுடைய அந்தப் பிழைகளையெல்லாம் அறிவார்கள்.

இதனை முதுமொழிக்காஞ்சி

சொல்சோர்வு உடைமையின் எச்சோர்வும்அறிப
(அறிவுப் பத்து : 8)

(சொல்சோர்பு = சொல்வதில் தவறு)

என்று குறிப்பிடுகிறது.

ஒருவன் முயற்சியின் திறம் அவன் முடிக்கும் செயலால் அறியப்படும் என்பது அறிவுப்பத்தில் நாம் அறிந்து கொள்ளக்கூடிய செய்தியாகும். இனி பழிக்கப்படாதன யாவை என்பது பற்றி முதுமொழிக்காஞ்சி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

5.6.2 மானிடப் பிறவி

பிறப்பிலேயே மக்கட்பிறப்பு மிக உயர்ந்தது. ஆறறிவு பெற்றிருக்கின்றதால் நூல்களைக் கற்கும் வாய்ப்பும் அவர்களுக்கே உள்ளது. அவ்வாறு கற்கும் கல்வி அவர்களுக்குச் சிறப்பைத்தரும். ஆனால் அதைவிடச் சிறப்புடையது அவர்கள் கற்ற வழியில் நடந்து ஒழுக்கம் உடையவர்களாக இருத்தல். கற்றவர்கள் கற்றவழி நடந்தால்தானே மனித சமுதாயம் மாண்பு உடையதாக விளங்கும். இதனை முதுமொழிக்காஞ்சி

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
(சிறந்த பத்து - 1)

(ஆர்கலி = நிறைந்த (கடல்) ஓசை, ஓதல் = கற்றல், சிறந்தன்று = சிறந்தது)

என்கிறது.

வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். மக்கள், செல்வத்தைப் பெற்றிருப்பதன் பயன் இரப்போர்க்கு ஈதலே ஆகும்.

செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம் -189)

என்று புறநானூற்றுப் பாடலும், முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கார்க்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளும் ஈதலின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றன. என்றாலும் பலர் செல்வம் வந்தபொழுது அந்த ஈகைப் பண்பை மறப்பதோடு, செல்வச் செருக்கினால் தீமைகள் பலவற்றையும் செய்வர். செல்வ மிகுதியால் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகளே மிகுதி. ஆனால் ஒருவர் வாய்மை உடையவர் ஆக இருந்தால் எப்படிப்பட்ட தீமையும் எவர்க்கும் உண்டாகாது. எனவே ஒருவர் பலவகைக் கேடுகளையும் விளைவிக்கக் கூடிய செல்வத்தைப் பெற்றிருப்பதை விட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பாகும். இதனை முதுமொழிக்காஞ்சி

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை
(சிறந்த பத்து : 4)

(சிறந்தன்று = சிறந்தது)

என்று கூறுகிறது.

இளமைப்பருவம் இன்பம் தரக் கூடியது. ஆனால் அதைவிட நோயற்ற வாழ்வு தரும் இன்பமே மிகச் சிறந்தது. கற்றல் சிறந்தது. கற்றலை விடக் கற்றாரை வழிபடல் சிறந்தது. இளமைக் காலத்தில் செல்வம் பெருகல் சிறந்தது. முதுமையில் அது குறையாமல் இருப்பது அதைவிடச் சிறந்தது என்பன போன்ற அரிய கருத்துகளையும் மதுரைக் கூடலூர் கிழார் கூறுகிறார்.