2.5 தொகுப்புரை

ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்னும் நூல்களின் வழியாக அறக்கருத்துகள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பாடத்தில் பார்த்தோம்.

ஆத்திசூடியில்,

நூல்பல கல்
ஓதுவது ஒழியேல்
எண் எழுத்து இகழேல்
இளமையில் கல்
கேள்வி முயல்

என்னும் தொடர்கள் கல்வியின் சிறப்பையும் கேள்வியின் தேவையையும் விளக்குகின்றன.

தனிமனித ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும்,

 
அறம் செயவிரும்பு
ஆறுவது சினம்

முதலிய தொடர்களையும்,

சமுதாய ஒழுக்க மேம்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்

 
ஒப்புரவு ஒழுகு
ஊருடன் கூடிவாழ்

ஆகிய தொடர்களையும் ஆத்திசூடி வழங்கியுள்ளது.

 
தானமது விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்

முதலிய தொடர்கள் ஈகையின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன.

 
போர்த்தொழில் புரியேல்
முனை முகத்து நில்லேல்

என்னும் ஆத்திசூடித் தொடர்கள், போர்களால் மக்கள் அடையும் இன்னல்களை எடுத்துக் கூறுகின்றன.

கொன்றை வேந்தன் என்னும் அறநூல், கல்வியின் சிறப்பு, முயற்சியின் உயர்வு, உழவுத் தொழிலின் பெருமை, விருந்தோம்பல் பண்பு முதலிய வாழ்க்கை மேம்பாட்டுச் செய்திகளையும் பிற அறக்கருத்துகளையும் வழங்கியுள்ளது.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

‘கொன்றைவேந்தன் என்னும் நூலை இயற்றியவர் யார்?

[விடை]
2.

ஒளவையார் எவற்றைக் கண்களுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார்?

[விடை]
3. கைப்பொருளை விட மெய்ப்பொருள் எது? [விடை]
4. போனகம் என்பது எதைக் குறிக்கும்? [விடை]
5. மருந்து என்பது எதைக் குறிக்கும்? [விடை]