3.0 பாட முன்னுரை

மக்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுவது மொழி. மொழி சொற்களால் ஆனது. சொற்கள் எழுத்துகளால் ஆனவை. எழுத்து என்பது மொழியின் சிறிய அலகு ஆகும். ஆகவே, ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்பதற்கு அடிப்படையாக அமைவது எழுத்து இலக்கணமே ஆகும். எழுத்துகளின் வரிவடிவம். ஒலிவடிவம், எழுத்துகளின் வகைகள், மாத்திரை, போலி முதலியவற்றைப் பற்றி இந்தப்பாடத்தில் காணலாம்.

ஒலிவடிவம், வரிவடிவம்

எழுத்துகளுக்கு ஒலிவடிவம், வரிவடிவம் என்று இருவகை வடிவங்கள் உண்டு. எழுத்துகளை இந்த இரண்டு வடிவங்களிலும் காணலாம். இவற்றில் ஒலி வடிவம் முதன்மையானது. எழுத்துகளை ஒலிப்பதே ஒலி வடிவம் எனப்படுகிறது, எழுத்துகளை எழுதிக்காட்டுவது வரி வடிவம் எனப்படும்,

அ, இ, உ, க், ச், ப்

எழுத்து இலக்கணத்தில் வரி வடிவத்தைவிட, ஒலி வடிவம் முதன்மையானது, ஒலியை அடிப்படையாகக் கொண்டே, எழுத்துகளின் இலக்கணம் சொல்லப்படுகிறது,