4.4 தொல்காப்பியம் - நன்னூல் கருத்து ஒப்பீடு ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் காண்பது மிகவும் பொருத்தம் ஆகும்.
(1) தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழிகளாக உயிர்எழுத்துகளை மட்டுமே தெரிவிக்கிறது. நன்னூல் உயிர்எழுத்துகளோடு உயிர்மெய் எழுத்துகளிலும் வரும் ஓர்எழுத்து ஒருமொழிகளைக் கூறுகின்றது. (2) தொல்காப்பியம் ஏழு உயிர் நெடில் எழுத்துகளையும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று வகுத்துள்ளது. நன்னூல், உயிர் நெடில்களில் ‘ஒள’ வை நீக்கி விட்டு, ஆறு நெடில்களை மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்று வரையறுக்கின்றது. (3) தொல்காப்பிய நூற்பா குற்றெழுத்துகளில் எதுவும் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது இல்லை என்று தெரிவிக்கின்றது. ஆனால் நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில் இரண்டு குற்றெழுத்துகள் (நொ,து) ஓர்எழுத்து ஒருமொழியாக வருவன என்பதைக் கூறுகின்றது. |