4.3 நன்னூலார் கருத்து

பதம் என்பதன் இலக்கணத்தை வரையறை செய்யும்போது, எழுத்துத் தனித்துப் பொருள் தரின் அல்லது தொடர்ந்து நின்று பொருள் தரின் அது ‘பதம்’ எனப்படும் என்று நன்னூல் விளக்கியதைக் கண்டோம்.

அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அவற்றை,

உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின

என்னும் நூற்பாவின் (128) வழி நன்னூல் விளக்குகிறது.

4.3.1 ஓர்எழுத்து ஒருமொழி

நன்னூல் மேற்காணும் நூற்பாவில் விளக்கும் செய்திகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம்.

உயிர், மவில் ஆறும் (1)

உயிர்எழுத்துகள் 6 'ம’ வருக்கத்தில் ஆறு 6

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ மா, மீ, மூ, மே, மை, மோ

தபந - இல் ஐந்தும்

(2) ‘த’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ப’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ந’ வருக்கத்தில் ஐந்து 5 தா, தீ, தூ, தே, தை பா, பூ, பே, பை, போ நா, நீ, நே, நை, நோ
கவச - இல் நாலும் (3) ‘க’ வருக்கத்தில் நான்கு 4 ‘வ’ வருக்கத்தில் நான்கு 4 ‘ச’ வருக்கத்தில் நான்கு 4 கா, கூ, கை, கோ வா, வீ, வை, வௌ சா, சீ, சே, சோ
ய வில் ஒன்றும் (4) ‘ய’ வருக்கத்தில் 1 யா
குறில் இரண்டும் (5) ‘நொ, து’- குறில் 2 நொ, து
மொத்தம்
42

மேலே பட்டியலில் காட்டியபடி தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன 42 என்று நன்னூல் வகுத்துள்ளது.

இப்போது இந்த 42 ஓர் எழுத்து ஒருமொழிகளும் உணர்த்தும் பொருள்களைக் காண்போம். இவற்றுள் பல சொற்களின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சில சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பொருள்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே மேலே கண்ட 42 எழுத்துகளும் உணர்த்தும் பொருள்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இந்த 42 எழுத்துகளை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,

(1) உயிர்எழுத்துகள் - 6
(2) உயிர் மெய் நெடில் எழுத்துகள் - 34
(3) உயிர் மெய்க் குறில் எழுத்துகள் - 2
மொத்தம் - 42

என்று அமையும்.

4.3.2 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர் எழுத்துகள்

ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் உயிர்எழுத்துகள் ஆறும் நெடில்எழுத்துகள் என்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. தொல்காப்பியம் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள்பற்றி விளக்கும்போது, இவற்றின் பொருள்கள் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் நினைவில் நிற்க வேண்டி மீண்டும் அவற்றின் பொருள் இங்குச் சுட்டப்படுகின்றன.

எழுத்து பொருள்
- பசு,
- ஈ,
- இறைச்சி,
- அம்பு,
- அழகு,தலைவன்,
- மதகு நீர் தாங்கும் பலகை.

4.3.3 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் நெடில் எழுத்துகளில், ம, த, ப, ந, க, வ, ச, ய என வரும் எட்டு வருக்கங்களில் வருபவை மட்டுமே ஓரெழுத்து ஒரு மொழிகள் ஆக வந்துள்ளன.

‘ம’ வருக்கத்தில் (6)

மா - பெரியது,
மீ - மேல்,
மூ - மூப்பு,
மே - மேல்,
மை - மசி,
மோ - மோத்தல்( நீர் மோத்தல் - முகத்தல்)

‘த’ வருக்கத்தில் (5)

தா, தீ, தை இவற்றின் பொருளை நீங்கள் அறிவீர்கள்.

தூ என்பது தூய்மை, வெண்மை என்றும்,
தே - என்பது கடவுள் என்றும் பொருள்படும்.

‘ப’ வருக்கத்தில் (5)

பா, பூ, பே, பை, போ என வருவனவற்றில் பூ, பை, போ ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரியும்.

பா என்பது - பாடல் என்றும்
பே என்பது - அச்சம் என்றும் பொருள்படும்.

‘ந’ வருக்கத்தில் (5)

நா, நீ, நே, நை, நோ இவற்றில் நா, நீ எனவரும் இரண்டு எழுத்துகள் உணர்த்தும் பொருள்களை நீங்கள் அறிவீர்கள்.

நே என்பது - அன்பு என்று பொருள்படும்.
நை என்பது - வருத்தம், துன்பம் என்று பொருள்படும்.
நோ என்பது - துன்பம் என்று பொருள்படும்.

‘க’ வருக்கத்தில் (4)

கா, கூ, கை, கோ. இவற்றில்

கா - காப்பாற்று, சோலை
கூ - பூமி
கோ - மன்னன், தலைவன்.

‘வ’ வருக்கத்தில் (4)

வா, வீ, வை, வௌ இவற்றில் வா, வை எனவரும் இரு எழுத்துகளின் பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

வீ - மலர்
வௌ - திருடல், கவர்தல்

‘ச’ வருக்கத்தில் (4)

சா, சீ, சே, சோ இவற்றில் சா என்பது இறத்தல் என்று பொருள்படும். 

சீ - இகழ்ச்சிக் குறிப்பாக வரும்; ஒளி என்றும் பொருள்படும்.
சே - எருது (காளை)
சோ - மதில்.

‘ய’ வருக்கத்தில் (1)

யா என்பது ஒருவகை மரம்.

  • உயிர்மெய்க் குறில்
  • நொ, து - ஆகிய உயிர்மெய்க் குறில் எழுத்துகள் இரண்டும் ஓர்எழுத்து ஒருமொழிகளாக அமைகின்றன.

    நொ என்பது ‘வருத்து’ அல்லது ‘துன்புறுத்து’ என்ற பொருளையும், து என்பது ‘உண்’ என்னும் பொருளையும் உணர்த்தும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. பதம் என்பதன் பொருள் வரையறை கூறுக. விடை
    2. ஓர்எழுத்து ஒருமொழி என்றால் என்ன? விடை
    3. தொடர்எழுத்து ஒருமொழியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. விடை
    4. தொல்காப்பியர்வழி நின்று சொல் தோன்றும் முறைகளை விளக்குக. விடை
    5. தொல்காப்பியர் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை? விடை
    6. நன்னூலார் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் எத்தனை? அவற்றை வகைப்படுத்துக. விடை