நாகரிகமும் பண்பாடும் மிகுந்த பழமையான நாடுகளுள் தமிழகமும் ஒன்று. உலகில் இதுவரை இருபத்தி மூன்று நாகரிகங்கள் அரும்பி, மலர்ந்து அவற்றுள் இரண்டே நாகரிகங்கள் இன்றளவில் நின்று நிலவுகின்றன. அவை சீன நாகரிகமும், தமிழர் நாகரிகமும் என்பது வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர். தாயின்பி (J.A. Toynbee)-யின் கருத்து. உயர்ந்த பண்பாடு மிகுந்த மக்களே சிறந்த நாகரிகத்தை வழங்க முடியும். எனவே, தமிழர்களின் பண்பாடே, அவர்களைச் சிறந்த நாகரிக மக்களாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது. பொதுவாகப் பண்பாடுகளை அறிவதற்கான அடிப்படைச் சான்றுகளாகப் பல அமைந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலக்கியங்கள், கலைகள், அகழ்வு ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் முதலியவை பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கொள்வதற்குரிய சான்றுகளாக உள்ளன. தமிழர் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு, இத்தகைய சான்றுகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. |