3.4 பழமொழி காட்டும் பண்பாடு

AudioE

மக்கள் உணரும் வகையில் எளிய மொழிகளிலும் தெரிந்த மொழிகளிலும் அறத்தைக் கூறவேண்டுமென்று சான்றோர் விரும்பினர். சமூகம் அறநெறியில் தவறாது இருக்க வேண்டும் எனக் கருதிய பெரியோர் அவ்வப்போது தாம் உணர்ந்தவற்றை எடுத்துக் கூறினர். ஒரு மொழியில் இஃது அறம், இஃது அறமில்லை எனக் கூறும் நூல்கள் அம்மொழி வழங்கும்
சமுதாயத்தின் பண்பாட்டைக் காட்டும். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உணர நீதி நூல்கள் சான்றாகும். நட்பு இருவரைப் பிணைப்பது. தீ நட்பு, கூடா நட்பு ஆகியவற்றைக் கொள்ளாது நல்ல நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும். நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும். நண்பனிடம் குறை கண்டால் அதற்காகச் சினம் கொள்ளக் கூடாது. இதனைப் பழமொழி நானூறு எவ்வாறு கூறுகின்றது?

நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப் பட்டார்களைக்
கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்து ஈயார்
பண் கொண்ட தீஞ்சொல் பணைத் தோளாய் - யார்
  உளரோ
தம்கன்று சாக்கறப் பார்.

(பழ, மர்ரே: 16)

Audio

 

Click here to Animate

கன்று சாகுமாறு பால் கறக்கலாமா? கூடாது. அதுபோல நட்பு தீய்ந்து போகுமாறு சினந்து கொள்ளலாமா? கூடாது. இதுபோல அழகிய பழமொழிகள் பலவற்றை உரிய நீதிகளோடு விளக்குவது பழமொழி நானூறு. ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்தல் இயலாது. இதனைப் பழமொழி எப்படிக் கூறுகின்றது தெரியுமா?

கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.

(பழ, மர்ரே: 62)

Audio


Click here to Animate

(கழுமலம் - சீர்காழி எனப்படும் ஊர். விழுமியோன் - கரிகாலன் என்ற பெயருடைய சோழன். உறற்பால - வந்து அடைய வேண்டியவை)

கரிகாலன் சிறுவனாக இருந்தபோது அரசுரிமை இழந்து எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான். அப்போது பட்டத்து யானை அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அனுப்பப் பெற்றது. அந்த யானை வேறு எவரையும் நாடாமல் கரிகாலனைத் தேடி வந்து அரசனாகத் தேர்ந்தெடுத்தது. வரவேண்டுமென்ற விதி இருந்தால் வராமல் போகுமா? இவ்வாறு பல நீதிகளை உணர்த்தி மக்களை வழிப்படுத்துகிறது பழமொழி. பண்பாட்டு நெறிகள் பலவற்றைப் பழமொழி கற்பிக்கின்றது.

அவற்றுள் சில :

  • கன்றை விட்டுத்தான் பசுவிடம் பால் கறக்கலாம். அம்பு விட்டுக் கறக்க முடியுமா?

  • ஏர்க்காலில் ஆணி போன்ற நடுவு நிலைமையோடு எந்த நிலையிலும் பணி செய்ய வேண்டும்.

  • பெரியவர்களைத் தகுதி அற்ற சொற்களால் குறை கூறுவது நிலாவைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது.

Click here to Animate
நிலாவைப் பார்த்து நாய் குரைத்தல்