6.0 பாட முன்னுரை

 

நபிகள் நாயகம் இறைவனால் அனுப்பப் பெற்ற தூதர்களுள் ஒருவர். கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டை உலகம் முழுதும் பரப்பும் நெறி அவருடையது. இப்பெருமானார் புதிய நெறியைப் போதிக்கவில்லை. முன்பு பல நபிமார்கள் (தூதர்கள்) போதித்த நெறியை நபிகள் நாயகம் முழுமைப்படுத்தியுள்ளார். அவரே அச்சமயத்தின் இறுதித் தூதர் ஆவார். அவர் வழியாகவே திருக்குரான் என்ற திருமறை நூல் உலகிற்கு வழங்கப் பெற்றது. இசுலாம் என்ற சொல்லுக்கு அடிபணிதல் என்பது பொருளாகும். நற்பண்பே இசுலாம் எனக் கூறுவர். இந்த நெறி தமிழகத்தில் புகுந்து தமிழ் மக்களால் ஒரு சமயம் என்று ஏற்றுக்கொள்ளப் பெற்றுப் பல வழிபாட்டுத் தலங்கள் உருவாகின. இச்சமயத்தின் தாக்கம் தமிழர் பண்பாட்டிலும் நிகழ்ந்தது.

கிறித்துவ சமயம் இயேசுநாதரால் தோற்றுவிக்கப் பெற்று உலகம் எங்கும் பரவியது. இயேசுநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல அற்புதங்களைக் கொண்டவை; அவர் சிலுவையில் அறையப்பட்டது உலக மக்களை உலுக்கியது. கருணை, அன்பு, அருள் ஆகிய நல்ல பண்புகளைக் கிறித்துவம் உலகிற்கு வழங்கியது. முன்பு இருந்த மதங்களிலிருந்து பலர் கிறித்துவ சமயத்திற்கு மாறினர். கிறித்துவ சமயம் தமிழர் பண்பாட்டில் தனக்குரிய பங்களிப்பைச் செய்தது.

இவ்விரு சமயங்களும் தமிழர் பண்பாட்டில் ஆற்றிய பங்கு குறித்து இங்குக் காணலாம்.