முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்கள் தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப்
பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றார்கள். 1943-இல் கும்பகோணத்தில் பிறந்த
இவர், தமிழில் B.A., M.A., M.Phil., Ph.D., ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்களும் படைப்பிலக்கியம்,
மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளாக
ஆசிரியப் பணியாற்றி வரும் இவர் 16 நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட
சிறுகதைகளையும்
கிட்டத்தட்ட 50 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள்
ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, செய்யுள் -நாடகம், சிறுகதை, இளைஞர்களுக்கான
வழிகாட்டி என்ற
பல்வேறு வகைகளில் அமைந்துள்ளன. இவர் ஒரு சீரிய
இலக்கிய ஆய்வறிஞர்; சிறந்த பேச்சாளர். பல கல்வி
நிறுவனங்களின் பாடநூல் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களிலும் உறுப்பினராக
உள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றிலும் பங்கு
பெற்று வருகின்றார். அனைத்து இந்திய வானொலியில் 30-க்கும் மேற்பட்ட சொற்
பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
இலக்கியப்பணி, கல்விப்பணி ஆகியவை
தவிர, பேரா.பாலசுப்ரமணியன் அவர்கள் தமிழகத்திற்கு வருகை
தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் நடுவண் அரசு அலுவலர்களுக்குத் தமிழ்நாட்டுச்
சுற்றுப் பயணத்தின்போது மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
16 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 24 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும்
வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார்.
பேரா. பாலசுப்ரமணியன் அவர்கள் தமிழ் இணையப்
பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்கள் வரைவதில் துவக்ககாலம் தொட்டே முழுமையாக
ஈடுபட்டு மிகச் சிறந்த பங்களிப்பினை நல்கி வருகின்றார்கள். பண்பாட்டு
வரலாறு, பாரதியாரின் கவிதை உலகம், பாரதிதாசன் கவிதை உலகம் போன்ற தலைப்புகளில்
பாடங்களை எழுதியும், அவற்றுக்கான ஒலி-ஒளி குறிப்புகளை வழங்கியும் உதவி
வருகின்றார்கள்.
|