1.7 தொகுப்புரை |
சங்க இலக்கியத் தொகுப்பு முறையில் ஐங்குறுநூற்றிற்குத் திணைக்கு நூறுபாக்கள் என்ற தனிச்சிறப்பு உண்டு. தொகை நூல்களில் ஐந்து ஆசிரியர்களால் மட்டுமே பாடப்பட்ட இரு நூல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று கலித்தொகை. ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் ஆகிய இவர்கள் ஐங்குறுநூற்றில் தாம் பாடிய திணையில் வல்லுநர்கள். ஐங்குறுநூற்றின் ஒவ்வொரு திணைப் பாடல்களும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள், கூற்று உரைப்போர், கூற்றைக் கேட்போர், விளி, இடைச்சொல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொகை, வகை செய்யப்பட்டுப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு வேறு எந்த அகநூலுக்கும் இல்லை. உரிப்பொருள் சார்ந்த பகுப்புகள் முதலிடத்திலும், கருப்பொருள் சார்ந்த பகுப்புகள் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இடைச்சொல்லால் மட்டுமே பெயர் கொண்ட பகுப்புகளும் உண்டு. |